தமிழகத்தில் கொரோனா: மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் முறை மீண்டும் அமலாகிறதா?
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் முறை அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வீரியத்துடன் இருந்த நிலையில் தமிழகம் முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. பேருந்து போக்குவரத்து முடக்கப்பட்டது. அத்தியாவசிய கடைகளை தவிர்த்து மற்ற கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
அது போல் திருமணம், இறப்பு நிகழ்ச்சிகளில் நெருங்கிய ரத்த சொந்தங்கள் மட்டுமே அதுவும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தில் ஈபாஸ் பெற்றுக் கொண்டு செல்லும் முறை அமலானது.

எல்லை விட்டு எல்லை செல்ல இ பாஸ்
இந்த இ பாஸ்களை மாவட்ட எல்லையில் உள்ள போலீஸார் கேட்டால் காண்பிக்க வேண்டும். இந்த நிலையில் தற்போது 3-ஆவது அலை தொடங்கிவிட்டது. ஓமிக்ரான் பாதிப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அடுத்த இரு வாரங்களில் ஓமிக்ரான் பாதிப்புகள் அதிகரிக்கும் என சுகாதாரத் துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா அதிகம் பாதிப்பு
இந்த நிலையில் சென்னை, கோவை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் அதிகரித்துள்ளன. பொங்கல் பண்டிகை வேறு இன்னும் 10 நாட்களில் வரவிருக்கிறது. இதற்காக துணி, மணி வாங்கவும் தை மாதம் பிறந்தால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு துணி, நகைகள் வாங்கவும் மக்கள் கூடுவது அதிகரிக்கும்.

மாஸ்க்
தற்போதே சென்னையில் 30 சதவீதம் பேர் மட்டுமே பொது இடங்களில் மாஸ்க் போடுவதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. எனவே பொங்கல் நேரத்தில் கேஸ்கள் அதிகரிப்பதை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை விதிக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் லாக்டவுன்
இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக முடிவாகவில்லை. எனினும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் கோயில்களில் அனுமதி ரத்து, கடைகள் இயங்கும் நேரம் குறைப்பு உள்ளிட்டவை அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகை
பொங்கல் பண்டிகையை கொண்டாட மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு மக்கள் படையெடுப்பர். இந்த நேரத்தில் துணிக்கடைகள், பேருந்துகளில் இருந்து மக்கள் கொரோனாவையும் தொற்றிக் கொள்ள கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இதற்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போக்குவரத்திற்கு தடை ஏதேனும் விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொங்கல்
பொங்கல் பண்டிகை, தமிழர் திருநாள் என்பதால் தற்போது பேருந்து போக்குவரத்தை முடக்கி மக்களின் அதிருப்தியை தமிழக அரசு பெறாது என்றே தெரிகிறது. வேண்டுமானால் பேருந்துகளில், கடைகளில் ஏதேனும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. பொங்கல் முடிந்த பிறகு வெளியாகும் கொரோனா தொற்று எண்ணிக்கையை வைத்து எந்த மாவட்டங்களில் கொரோனா அதிகம் உள்ளது என்பது கருத்தில் கொள்ளப்படும்.

இ பாஸ் நடைமுறை அமலாகிறதா
இதை வைத்து இந்த மாவட்டங்களுக்குள் போக்குவரத்து முடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஒருவேளை கொரோனா அதிகம் பாதித்த மாவட்டத்திற்குள் செல்ல வேண்டுமானால் ஈ பாஸ் நடைமுறை கொண்டு வரப்படலாம் என்று தெரிகிறது. மேலும் கடந்த முறையை போல் கொரோனா தொற்றிற்கு ஏற்ப மாவட்டங்கள் பிரிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் குறைந்த கட்டுப்பாடுகளும் அதிகமாக உள்ள மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படலாம் என்றே தெரிகிறது. முழு லாக்டவுன் போட்டு மக்களை பொருளாதார ரீதியில் கஷ்டப்படுத்தக் கூடாது என்பது அரசின் நோக்கம். எனவேதான் சுய பாதுகாப்பு முக்கியம் என அரசு கூறி வருகிறது. ஆனாலும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதில்லை, பெரும்பாலானோர் மாஸ்க் அணிவதில்லை. எனவே மக்களை காக்க அரசு இத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டியதும் உள்ளது. கடும் கட்டுப்பாடுகள் குறித்து பொங்கல் கழித்துதான் தெரியவரும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications