நவ.19ல் வங்கக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தம்.. புயலாக மாறும்.. காரணம் என்ன? வெதர்மேன் விளக்கம்
சென்னை: வங்கக் கடலில் அடுத்து உருவாகவுள்ள குறைந்த காற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுவையில் தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலில் தென் மேற்கு பகுதியையொட்டியுள்ள பகுதியில் கடந்த 9 ஆம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்தம் உருவானது.
இது கடந்த 10-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தமாக உருவானது. எனினும் இது புயலாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவ்வாறு மாறவில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்தம்
இந்த நிலையில் காற்றழுத்தமானது இன்று வலுவிழந்துவிட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது தமிழகத்தின் உள் மாவட்டங்களின் வழியே மேற்கு - வடமேற்கு திசைக்கு சென்று அரபிக் கடலில் கலந்துவிட்டது. காற்றில் ஈரப்பதம் இருக்கும் என்பதால் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சூரியன்
சென்னையில் பெரும்பாலான இடங்களில் சூரியன் எட்டி பார்க்கும் என்றும் சில இடங்களில் அங்கும் இங்குமாக மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். மேலும் மீண்டும் நவம்பர் 19 அல்லது 20-ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகும் என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

ஒன் இந்தியாவுக்கு பேட்டி
இதுகுறித்து அவர் தமிழ் ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் வரும் நவம்பர் 19 அல்லது 20 ஆம் தேதிகளில் காற்றழுத்தம் உருவாகும். இது ஆழ்ந்த காற்றழுத்தம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என தீவிரமடைந்து புயலாக மாறும். இதற்கு முன்னர் உருவான காற்றழுத்தத்தின் போது எம்ஜேஓ உருவாகவில்லை.

காற்றழுத்தம்
ஆனால் இனி உருவாகும் காற்றழுத்தங்களின் போது எம்ஜேஓ (மேடன் ஜூலியன் அசைவு) உருவாகிறது. இதனால் அவை தீவிரமடைந்து புயலாக மாற வாய்ப்புகள் உள்ளன. தற்போது புதிதாக உருவாகும் காற்றழுத்தம் தமிழகத்தை நோக்கியே வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எம்ஜேஓ என்றால் என்ன
எம்ஜேஓ என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மேடன் ஜூலியன் ஆசிலேஷன். மழை பெய்ய எல்லா விதமான சாதகமான சூழலும் அமைந்த போதிலும் வறண்ட வானிலை ஏற்படுகிறது. கோடை காலத்தில் திடீரென மழையும் புயலும் உருவாகிறது. இந்த கால நிலை மாற்றம் எப்படி என்ற ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்ட போதுதான் இந்த எம்ஜேஓவை கண்டுபிடித்தார்கள்.

புயல் உருவாக சாதகம்
இந்த அலைவானது இந்திய பெருங்கடலில் இருந்து பசிபிக் கடலுக்கு நகர்கிறது. கிழக்கு பசிபிக் கடலில் வலுவிழக்கிறது. பின்னர் மீண்டும் இந்திய பெருங்கடலில் மீண்டும் உருவாகிறது. இப்படியாக இந்த அலைவானது உலகை 30 முதல் 60 நாட்களுக்கு சுற்றி வருகிறது. அவ்வாறு சுற்றி வரும் போது இந்த அலைவானது வங்கக் கடல் அருகே வருவதால் புயல் உருவாகும் என சொல்லப்படுகிறது. இதைத்தான் வெதர்மேன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications