அடுத்த வாரம் வங்கக் கடலில் காற்றழுத்தம்.. புயலாக மாறுமா?.. வெதர்மேன் சொன்ன சூப்பர் அப்டேட்!
சென்னை: வங்கக் கடலில் அடுத்த வாரம் மேலடுக்கு சுழற்சி உருவாகி அது காற்றழுத்தமாக மாற வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முதல் நாளிலேயே தீவிரமடைந்துள்ளது. சென்னையில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி, நவம்பர் 1, நவம்பர் 2 ஆம் தேதி மிக கனமழை பெய்தது. அது போல் புறநகர் பகுதிகளிலும் வெளுத்து வாங்கியது.
இதனால் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு இரு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் மழையானது படிப்படியாக குறைந்தது. தற்போது சென்னையில் பெரும்பாலான இடங்களில் வெயில் வந்துள்ளது.

திருவள்ளூர்
சென்னையை போல் திருவள்ளூரிலும் கனமழை பெய்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பேட்டி அளித்துள்ளார். இவர் கூறுகையில் முதல் மழையானது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நன்கு பெய்துள்ளது. இந்த மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகம் இருந்ததாக சொல்லலாம்.

வடசென்னை
அதிலும் குறிப்பாக வடசென்னை, திருவள்ளூர் மாவட்டம் ஆகிய இடங்களில் கனமழை பெய்துள்ளது. பெரம்பூர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் 300 மி.மீ. மழை பெய்துள்ளது. நவம்பர் மாதத்தில் சென்னையின் மழையின் அளவு 350 மி.மீ. ஆகும். ஆனால் தற்போது இந்த இரு நாட்களில் சென்னையின் வடசென்னையில் 300 மி.மீ. மழை பெய்துள்ளது. கிட்டதட்ட 90 சதவீதத்தை அடைந்துவிட்டோம். இது ஒரு அற்புதமான தொடக்கம்.

மழையின் தாக்கம்
அது போல் தென் மாவட்டங்களில் விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. வரும் நாட்களில் மழையின் தாக்கம் வடதமிழகத்தில் சற்று குறையும். வடகிழக்கு பருவமழை தொடக்கத்தின் போதே சிட்ரங் புயல் வங்கதேசம் நோக்கி நகர்ந்துவிட்டது. தற்போது பெய்த மழை மேலடுக்கு சுழற்சியால் பெய்தது.

மன்னார் வளைகுடா
இது அப்படியே மன்னார் வளைகுடா வழியாக கடலுக்குள் சென்றுவிடும் என தெரிகிறது. வரும் 6, 7 ஆகிய தேதிகளில் மேலடுக்கு சுழற்சி உருவாகி , அது காற்றழுத்த பகுதியாக வங்கக் கடலில் உருவாக வாய்ப்பிருக்கிறது. அது அப்படியே 9 அல்லது 10 தேதி வரை இருக்கும். அது வலுவடைந்து புயலாக மாறுமா இல்லை காற்றழுத்தமாகவே இருக்குமா என்பதை உருவானவுடன் சொல்லலாம். வடகிழக்கு பருவமழை என்று வந்துவிட்டாலே ஒரு புயலானது வந்துவிடும். அது தமிழகத்திற்கா இல்லை ஆந்திரத்திற்கா என்பது போக போகத்தான் தெரியும் என்றார்.












Click it and Unblock the Notifications