1996 ஆம் ஆண்டுக்கு பிறகு.. கனவாக இருக்கு... சென்னையில் மழை இடியால் பெய்யவில்லை.. வெதர்மேன் விளக்கம்
சென்னை: சென்னையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு மழையால் இன்றுதான் ஜூன் மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று காலை முதலே சிறிய தூரல்கள் போட்டுக் கொண்டிருந்தது. வெயிலின் தாக்கம் நேற்று அந்த அளவுக்கு இல்லை.

மாலைக்கு மேல் லேசான மழை பெய்தது. ஆனால் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த மழையால் 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கத்தால் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு என்பது தாமதமானது. ஜூன் மாதம் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு என அறிவிக்கப்பட்ட நிலையில் 100 டிகிரி செல்சியஸை தாண்டி வெப்பம் இருந்ததால் பள்ளிகள் திறப்பானது தள்ளி போனது. இதனால் ஜூன் 7 என அறிவிக்கப்பட்டு மீண்டும் மழை காரணமாக ஜூன் 12, 14 ஆகிய இரு தேதிகளில் பெரிய வகுப்புகள், சிறிய வகுப்புகளுக்கு முறையே பள்ளிகள் திறக்கப்பட்டன.

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தேங்கி இருக்கும் தண்ணீரை மாநகராட்சி அதிகாரிகள் மோட்டார் மூலம் வடிய வைக்கிறார்கள். இந்த நிலையில் இந்த மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது: 2கே கிட்ஸ் அதிர்ஷ்டசாலிகள்.
ஜூன் மாதத்தில் அதீத வெப்பத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறையை பெற்றார்கள். தற்போது கனமழையால் இன்றும் விடுமுறையை பெற்றுள்ளார்கள். ஜூன் மாதத்தில் சென்னையில் 55 மி.மீ. மழை பெய்துள்ளது என்பது சாதாரண விஷயமாகும். ஆனால் சில இடங்களில் 6 மணி நேரத்திற்கு குறைவாக பெய்த மழையால் ஒரே நாளில் மழையின் அளவு இயல்பைவிட 3 மடங்கு அதிகமானது.

1996 ஆம் ஆண்டு மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அத்துடன் தற்போதுதான் அதாவது 27 ஆண்டுகளுக்கு பிறகு மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் 150 மி.மீ மழை பெய்துள்ளது. 1991, 1996 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் வரலாற்று சிறப்புமிக்க மழை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்துள்ளது.
இவையெல்லாம் இடியால் பெய்த மழை அல்ல. கடலில் இருந்து நகரும் மேகக் கூட்டங்களால் பெய்த மழை. அளவுக்கு அதிகமான வரலாற்று சிறப்பு மிக்க அதிக வெப்பத்தை பார்த்துள்ளோம். அதை மழை மூலம் இயற்கை சரி செய்துவிட்டது. கடலில் இருந்து நகர்ந்த மேகக் கூட்டங்களால் மழை என்பது இப்போது கூட கனவாகவே உள்ளது. 1996 ஆம் ஆண்டு சென்னையில் ஒரு வாரத்திற்கு மேல் மழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications