அக்.31 இல் சென்னைக்கு தரமான சம்பவம் இருக்கு.. 2021 ரிட்டர்ன்ஸ்.. வெதர்மேன் போட்ட பரபரப்பு போஸ்ட்!
சென்னை: சென்னையில் நாளை மறுநாள் அல்லது நவம்பர் 1 ஆம் தேதி கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கேரளா, மகாராஷ்டிரா, கோவா, தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு பலனை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை கடந்த 23 ஆம் தேதி விலகியது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுவைக்கு பலனை அளிக்கும் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கடந்த 23 ஆம் தேதி தாமதமாக விலகியதால் வடகிழக்கு பருவமழையும் தாமதமாக தொடங்குவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழைக்கு ஏற்ற சாதகமான சூழல் நிலவவில்லை.

காற்றின் ஈரப்பதம்
காற்றின் ஈரப்பதமும் குறைவாகவே இருந்தது. இதனாலும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது. எனினும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது.

தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகையே மழையோடு இருக்கும் என சென்னைவாசிகள் கவலைக் கொண்டனர். ஆனால் சென்னை, வடதமிழக மக்கள் மகிழ்ச்சியாகவே பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். தென் மாவட்டங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பெய்ததால் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் ஒரு சுணக்கம் ஏற்பட்டது.

தமிழ்நாடு வெதர்மேன்
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூகவலைதள பதிவில் மழை குறித்து ஒரு தகவலை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மத்திய கடலோர பகுதி, தென் கடலோர பகுதி, தென் தமிழகம் ஆகியவற்றில் இன்று மழை தொடங்கும். அது போல் வட கடலோர தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 1 வாரம் வரை நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது.

6 நாட்களில் ஒரு நாள்
சென்னையில் வரும் 31 ஆம் தேதி அல்லது நவம்பர் 1 ஆம் தேதி தரமான சம்பவம் நடைபெறும். மேலடுக்கு சுழற்சியால் வரும் நவம்பர் 5ஆம் தேதி வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 6 நாட்களில் குறைந்தபட்சம் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு ஒரு நாளாவது சிறந்த நாளாக அமையும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போல் இந்த ஆண்டும் மழை பெய்யும். இவ்வாறு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications