ஒன்றல்ல 2 காற்றழுத்த தாழ்வுபகுதி.. அடுத்தடுத்து வருகிறது.. ஒரு வாரம்.. தமிழகத்தில் மழை வெளுக்கும்!
சென்னை: வங்ககடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வேகமாக வலுவடைந்து வருகிறது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து உள்ளது.
Recommended Video
இரண்டு நாட்களுக்கு முன் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது வடக்கு ஒடிசா-மேற்குவங்கம் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருகிறது.
கேரளாவில் இதனால் வயநாடு, இடுக்கி, கண்ணூர், தலைசேரி ஆகிய பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்து வருகிறது .இதனால் கேரளாவில் வயநாடு மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை
இதனால் மும்பையிலும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. அதேபோல் அங்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் உத்தர பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாவட்டங்களிலும் இதனால் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலைமை என்ன
தமிழகத்திலும் இதனால் கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக நீலகிரியில் இதனால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தீவிர கனமழை பெய்து வருகிறது. அங்கு கனமழையால் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மூன்று நாட்களாக நீலகிரியில் கனமழை பெய்து வருகிறது. அங்கு பல இடங்களில் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. வீடுகள் தண்ணீரில் மூழ்கியது. தற்போது அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

மோசம் நீலகிரி
அதிலும் நீலகிரியில் இருக்கும் காலம்புழா உள்ளிட்ட அணையில் இன்று கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படடுள்ளது. அதேபோல் வெள்ளப்பெருக்கு காரணமாகவும், கடுமையான மழை காரணமாகவும் நீலகிரியில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் தற்போது மாநில பேரிடர் மீட்பு படை அங்கு களமிறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மீண்டும் வருகிறது
இந்த நிலையில் தமிழகத்தில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வங்கக்கடலில் தற்போது இன்னொரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் அல்லது 9ம் தேதி மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். மேற்கு வங்ககடல் பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

ஒரு வாரம் எப்படி
அது பின்னர் தாழ்வு பகுதியாக மாறும். ஏற்கனவே உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, தமிழகம், ஒடிசா மாநிலங்களில் கனமழை நீடிக்க போகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மிக தீவிரமான கனமழை பெய்ய போகிறது.

தமிழகத்தில் எப்படி இருக்கும்
தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த ஒரு வாரத்திற்கு மிக தீவிரமான கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கு கடலோர மாவட்டங்கள், நீலகிரி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையில் சாரல் மழை முதல் மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications