சென்னையில் இளைஞர் காங்கிரஸ் நடத்திய பக்கோடா சுடும் போராட்டம்...!
சென்னை: வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் நிலையில் அதனை போக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனக் கூறி இளைஞர் காங்கிரஸ் சார்பில் சென்னையில் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது.
இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் பக்கோடா சுடுவதை போல் சித்தரித்து கவன ஈர்ப்பு போராட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஹசன் மவுலானா, ஜெபி மாத்யூ, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களும் எழுப்பபட்டன.

நூதனப் போராட்டம்
நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக வேலைவாய்ப்பின்மையை போக்கக் கோரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் மத்திய அரசைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸார் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் இன்று பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பக்கோடா சுடும் போராட்டம் நடைபெற்றது.

திருவல்லிக்கேணி
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நேதாஜி இல்லம் முன்பு திரண்ட இளைஞர் காங்கிரஸார், அங்கு அடுப்பை பற்ற வைத்து பக்கோடா தயாரித்தனர். பட்டம் வாங்கும் போது அணியும் அங்கியை அணிந்தவாறு பக்கோடா சுட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியை அந்த வழியாக சென்ற மக்கள் திரும்பிப் பார்க்க தவறவில்லை. மேலும், சுட்ட பக்கோடாவை ஒரு பாக்ஸில் வைத்து பேருந்துக்காக நின்றவர்கள், அந்த வழியாக சாலையில் சென்றவர்களுக்கு இளைஞர் காங்கிரஸார் வழங்கினர்.

வேலைவாய்ப்பு
மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டதாகவும், வரலாறு காணாத அளவுக்கு வேலையின்மை நிலை ஏற்பட பிரதமர் மோடியே காரணம் எனவும் புகார் கூறினர். அதைத்தொடர்ந்து வேலைவாய்ப்பை உருவாக்கக் கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மவுலானா, மற்றும் கேரளாவில் இருந்து சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த ஜெபி மாத்யூ ஆகியோர் அதில் பங்கேற்றனர்.

வெறுப்பு
இந்நிலையில் வேலையின்மையின் விரக்தியால், படித்து பட்டம்பெற்றவர்கள் கூட ஷூ பாலீஷ் போட வேண்டிய அவலநிலைதான் நாட்டில் உருவாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். அதனை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே ஷூ பாலிஷ் போடுவது போன்ற நூதனப் போராட்டத்தை நடத்தியதாகவும் மற்றபடி எந்த தொழிலையும் தாங்கள் குறை கூறவில்லை எனவும் இளைஞர் காங்கிரஸார் கூறினர்.












Click it and Unblock the Notifications