1000 டாஸ்மாக் கடைகளில் வருகிறது புதிய வசதி.. குடிமகன்களுக்கு குஷியான தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் தினமும் ரூ.2 லட்சத்துக்கு மேல் விற்பனையாகும் 1,000 மதுக்கடைகளில் 2 விற்பனை பிரிவுகளை அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கிறது. இதன் மூலம் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது என்று கூறப்படுகிறது. கடை மேற்பார்வையாளர்கள் முதல் நாள் விற்பனைத் தொகையை வங்கியில் செலுத்திய பிறகு மதுபானக்கடை பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 4,829 இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் விற்பனை செய்யப்படும் மது வகைகள் மூலம் தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு ரூ.45 ஆயிரம் கோடி வருவாய் கிடைப்பதாக கூறப்படுகிறது. வரும் ஆண்டில் 50000 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் தமிழக அரசுக்கு டாஸ்மாக் வருமானம் கணிசமாக கைகொடுத்து வருகிறது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை பொறுத்தவரை மொத்தம் உள்ள 4,829 கடைகள் ஏ, பி, சி, டி என 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் தினமும் ரூ.2 லட்சத்து மேல் விற்பனையாகும் 'ஏ' பிரிவு கடைகள் 1,000 இருக்கின்றன. இந்தக் கடைகளில் தற்போது புதிதாக 2 விற்பனை பிரிவுகள் தொடங்கப்பட இருக்கின்றன.
ஏற்கனவே கூடுதல் விலையில் மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க 'கியூ.ஆர். கோடு' மூலம் மது விற்பனை செய்யும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது தினமும் ரூ.2 லட்சத்துக்கு விற்பனையாகும் மதுக்கடைகளில் 2 விற்பனை பிரிவுகளை தொடங்க டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதால், மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது என்கிறார்கள்.
இது தொடர்பாக, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: டாஸ்மாக் மதுபானக்கடைகளில் சராசரி விற்பனைத் தொகை ரூ.2 லட்சத்துக்கு மேல் விற்பனையாகும் கடைகளில் 2 விற்பனை பிரிவுகள் அமைக்க வேண்டும்.
டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் முதல் நாள் விற்பனைத் தொகையை வங்கியில் செலுத்திய பிறகு கடை பணியில் இருக்க வேண்டும். இதை உறுதி செய்யும் பொருட்டு மாலை 5 மணிக்கு சம்பந்தப்பட்ட இளநிலை உதவியாளருக்கு ஜி.பி.எஸ். புகைப்படத்தை அனுப்பிவைக்க வேண்டும். மேற்படி கடைப்பணியில் இல்லாத கடை மேற்பார்வையாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மதுபானக் கடையின் கடை எண்ணுடன் கூடிய பெயர் பலகை மற்றும் விலைப்பட்டியல் வாடிக்கையாளர்களுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும்.
அனைத்து விதமான பதிவேடுகளும் தினந்தோறும் பராமரிக்கப்பட வேண்டும்.
கடையின் விற்பனையில் வெளிநபர்கள் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் கடைப் பணியாளர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுத்து உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications