அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.1000.. கோவில்களில் மொட்டை போட கட்டணம் கிடையாது: அமைச்சர் அதிரடி அறிவிப்பு
சென்னை: தமிழக திருக்கோவில்களில், மொட்டை போட்டுக் கொள்ளும் பக்தர்களிடம் இனி கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார்.
இந்து அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றபோது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதில் பல அறிவிப்புகள் பக்தர்களுக்கும், அர்ச்சககர்களுக்கும் மகிழ்ச்சி தருவதாக அமைந்துள்ளது.

அர்ச்சகர்கள் மாத ஊக்கத் தொகை
இதோ அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்: ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ.1,000 வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ.13 கோடி ஒதுக்கப்படும். திருக்கோயில்களின் பாதுகாப்பிற்கென 10,000 பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும்.

முடி காணிக்கை செலுத்த கட்டணம் இல்லை
அறநிலையத் துறை பராமரிப்பிலுள்ள திருக்கோவில்களில் இனி பக்தர்கள் முடி இறக்கி காணிக்கை செலுத்த கட்டணம் கிடையாது, பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவதற்காக மொட்டை அடிப்பதற்கு இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்ற இந்த நடைமுறை நாளை செப்டம்பர் 5 முதல் அமலுக்கு வரும்.

வடலூர் சர்வதேச மய்யம்
அருட்பிரகாச வள்ளலார் புகழை போற்றும் வகையில் வள்ளலார் சர்வதேச மய்யம் வடலூரில் அமைக்கப்படும். இந்து சமய அறநிலைய துறை சார்பில் சென்னை உட்பட தமிழகத்தில் 10 இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 150 கோடி செலவில் தொடங்கப்படும்.

கட்டணம் கிடையாது
தமிழர் திருநாளாம் தை திருநாளில் ரூபாய் 10 கோடி செலவில் அர்சகர்களுக்கு புத்தாடை மற்றும் பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும். மணமக்களில் ஒருவர் மாற்று திறனாளியாக இருப்பின் கோயிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் கிடையாது.

திருமண மண்டபம்
கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபதிற்கான பராமரிப்பு கட்டணம் மட்டும்தான், வசூலிக்கப்படும். திருக்கோயில்களை பாதுகாப்பதற்கென 10 ஆயிரம் பாதுகாப்புப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.












Click it and Unblock the Notifications