60 பவுனுன்னு புகார்! 110 சவரன் பறிமுதல்! கணக்கு இடிக்குதே! ஐஸ்வர்யா ரஜினியிடம் ரசீது கேட்கும் போலீஸ்
சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைத் திருட்டு விவகாரம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனது கணவர் தனுஷை பிரிந்து தனது தந்தையின் போயஸ் தோட்ட இல்லத்தில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகாரை கொடுத்துள்ளார்.
அதில் தனது வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகைகளை காணவில்லை. அவை வைரம், ரத்தினக் கற்களால் ஆனவை. 18 ஆண்டுகளாக அந்த நகைகளை சேர்த்து வைத்துள்ளேன். அவற்றில் பாரம்பரிய நகைகளும் இருந்துள்ளன. லாக்கரின் சாவியை நான் வைக்கும் இடம் எனது வீட்டு பணிப்பெண்களுக்கு நன்றாகவே தெரியும்.

பணியாளர்கள் மீது சந்தேகம்
எனவே அவர்கள் மீது எனக்கு சந்தேகம் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் சாலையில் வசித்து வந்த வீட்டில் நகைகள் இருந்தனர். பின்னர் முன்னாள் கணவர் தனுஷுடன் வசித்து வந்த சிஐடி நகரில் உள்ள வீட்டில் குடியேறிய போது அங்கும் லாக்கர் கொண்டு செல்லப்பட்டது.

போயஸ் கார்டன் வீட்டில் குடியேறிய ஐஸ்வர்யா
இதைத் தொடர்ந்து தற்போது போயஸ் கார்டனில் குடியேறி வசித்து வருகிறேன். லாக்கர் மாறி மாறி 3 வீடுகளில் வைக்கப்பட்டிருந்தது என புகாரில் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸார் ஐஸ்வர்யா, தனுஷ், ரஜினி வீட்டில் பணியாற்றியவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். அதில் ஈஸ்வரி என்ற பணிப்பெண் கடந்த 6 மாதங்களுக்கு வேலைக்கு செல்லாமல் நின்றுவிட்டதாக தெரிகிறது.

மந்தைவெளி
உடனே அவர் குறித்து விசாரித்து மந்தைவெளியை சேர்ந்த ஈஸ்வரியையும் அவரது கணவர் அங்கமுத்துவையும் போலீஸார் விசாரணைக்கு அழைத்து வந்தனர். அப்போது ஈஸ்வரியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக் தகவல்கள் கிடைத்தன. ஐஸ்வர்யா வீட்டில் திருடிய பணத்தில் ரூ 1 கோடி சொகுசு பங்களா, கணவருக்கு காய்கறி கடை, மகளுக்கு மளிகை கடை, வீட்டில் 100 சவரனுக்கு மேல் நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் என போலீஸாரையே அதிர வைத்துள்ளார்.

ஈஸ்வரியின் கணவர்
மேலும் இந்த சம்பவத்தில் ஈஸ்வரியின் கணவருக்கு எந்த பங்கும் இல்லை என தெரியவந்தது. காரணம், சோழிங்கநல்லூரில் வீடு வாங்கியது குறித்து ஈஸ்வரி, அங்கமுத்துவிடம் கூறுகையில் நான் ஐஸ்வர்யாவின் பினாமி, என் பெயரில் அவர் வீடு வாங்கியுள்ளார். ஊரை பொருத்தவரை இது நம் வீடு, ஆனால் உண்மையில் ஐஸ்வர்யாவின் வீடு என வீட்டிலேயே ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

நடிகர் தனுஷ் வீட்டிலும் கைவரிசை
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈஸ்வரி நடிகர் தனுஷின் வீட்டிலும் திருடியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் ஐஸ்வர்யா வீட்டில் காணாமல் போன நகைகள் 60 பவுன், ஆனால் ஈஸ்வரி வீட்டில் நகைகள் மட்டும் 100 பவுனுக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே இதுகுறித்து ஐஸ்வர்யாவிடம் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அப்போது அவரிடம் காணாமல் போன நகைகளுக்கான ரசீதையும் கேட்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் ஏற்கெனவே விலையுயர்ந்த வைர மோதிரம், திருட்டு போய் அது மீட்கப்பட்டது. இதனால் ஈஸ்வரி ரஜினி வீட்டிலும் கைவரிசை காட்டியிருக்கலாம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications