தகைசால் தமிழர் விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு.. தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.10 லட்சம் பெறுகிறார்!
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் ஒருவருக்கு வழங்கப்படும் தகைசால் தமிழர் விருதுக்கு இந்த ஆண்டு குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது முதல்வர் ஸ்டாலினிடம் விருது பெறுகிறார் குமரி அனந்தன்.
தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் "தகைசால் தமிழர்" என்ற பெயரிலான விருது கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது காங்கிரஸ் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான குமரி அனந்தனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குமரி அனந்தன், தெலுங்கானா - புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் குமரி அனந்தனுக்கு "தகைசால் தமிழர் விருது' வழங்க தேர்வுக் குழுவினர் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.10 லட்சத்துக்கான காசோலை, பாராட்டு சான்றிதழ் ஆகியவை குமரி அனந்தனுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த விருதை இந்தியாவின் 76வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வழங்க உள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம்: இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்ற விருதை உருவாக்கவும், இந்த விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2021-ல் ஆணையிட்டிருந்தார்.

ஏற்கனவே விருது பெற்றவர்கள்: இந்த விருது கடந்த 3 ஆண்டுகளில் சங்கரைய்யா அவர்கள், ஆர். நல்லகண்ணு மற்றும் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதிற்கான நடப்பாண்டு விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இன்று (1.8,2024) நடைபெற்றது.
குமரி அனந்தன்: இந்தக் கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் காந்தி ஃபோரம் அமைப்பின் தலைவரும் இலக்கியச் செல்வராகவும், இலக்கியக் கடலாகவும், எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மலாகவும் விளங்கும் குமரி அனந்தன் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் இவ்வாண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது.
தகைசால் தமிழர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குமரி அனந்தன் அவர்களுக்கு, பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வருகிற ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications