எக்சிட் போல் 2021: ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் மாதவராவிற்கு வெற்றி?.. கொண்டாட உயிருடன் இல்லையே!
சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மறைந்த மாதவராவ் வெற்றி பெற வாய்ப்பு என தந்தி டிவி கருத்து கணிப்புகள் கூறுவதை பார்த்தால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றே தெரிகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபை தொகுதி. இந்த தொகுதி 1957 ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. 1967 ஆம் ஆண்டு கர்மவீரர் காமராஜ் திமுகவின் பி சீனிவாசனிடம் தோல்வி அடைந்தார்.
இந்த தொகுதியில் அதிமுக, திமுக, மதிமுக, தேமுதிக என மாறி மாறி வென்றுள்ளன. காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு முறை 1989 ஆம் ஆண்டு வென்றது. இந்த முறை விருதுநகர் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

உடல்நலக் குறைவு
இவர் வேட்புமனு தாக்கல் செய்த அடுத்த நாளே உடல்நலக் குறைவு ஏற்பட்டது. எனினும் அவர் இரு தினங்கள் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

வேட்பாளர்
பின்னர் அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மாதவராவின் மகள் திவ்யா தனது தந்தைக்காக தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இவரே மாதவராவிற்கு பதிலாக வேட்பாளராக மாற்றப்படுவார் என பரவலாக பேசப்பட்டது.

இரு முறை மாரடைப்பு
இந்த நிலையில் மாதவராவிற்கு இரு முறை மாரடைப்பு ஏற்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10-ஆம் தேதி காலமானார். காங்கிரஸ் கட்சியில் பல பதவிகளை வகித்தவர். இவர் தொகுதி மக்களிடம் நல்ல அறிமுகம் உள்ளவர் என்பதால் இவர் நிச்சயம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக
இந்த நிலையில் தந்தி டிவி கருத்துக் கணிப்புகள் தொகுதி வாரியாக நேற்று வெளியானது. இதில் விருதுநகர் தொகுதியில் மறைந்த மாதவராவ் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் பாண்டுரங்கனை தோற்கடித்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல்
ஒரு வேளை கருத்து கணிப்புகளின்படி மாதவ ராவ் வென்றால் விருதுநகர் தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்படும். அவ்வாறு நடத்தப்பட்டால் வசந்தகுமாரின் மகனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது போல் மாதவராவின் மகள் திவ்யாவிற்கு காங்கிரஸ் வாய்ப்பளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இடைத்தேர்தல் வந்தாலும் விருதுநகரில் காங்கிரஸே போட்டியிடும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications