ஓபிஎஸ் நடத்துவது கட்சி கூட்டமல்ல.. பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் கூட்டமே.. ஜெயக்குமார் விளாசல்!
சென்னை: ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இருப்பது பிரைவேட் லிமிடெட் கம்பெனி என்றும், அவர் நடத்துவது கட்சி கூட்டம் அல்ல என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
அதிமுக கட்சிக்குள் ஏற்பட்ட இரட்டை தலைமை பிரச்னையால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இரு அணிகளாக பிரிந்துள்ளன. கட்சியை உரிமை கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் ஓபிஎஸ் தரப்பில் நியமிக்கப்பட்ட கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மாறிய வானிலை..6 மாவட்டங்களில் அடி வெளுக்கப்போகும் கனமழை..காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா?
அதிமுக ஆர்ப்பாட்டம்
இதனிடையே தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, சட்டம் - ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களில் திமுக அரசை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வண்ணாரப்பேட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பிரைவேட் லிமிடெட் கம்பெனி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ஜெயக்குமார் கூறுகையில், ஓபிஎஸ் தலைமையில் இருப்பது பிரைவேட் லிமிடேட் கம்பெனி. அது கட்சி கூட்டம் அல்ல. ஓபிஎஸ்-க்கும் கட்சிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. விலை மோரில் நெய் கடையும் வித்தை தெரிந்தவர் ஓபிஎஸ். அவரின் செயல்பாடுகள் எதுவும் தமிழக அரசியல் எடுபடாது என்று தெரிவித்தார்.
கூடா நட்பு
தொடர்ந்து பண்ருட்டி ராமச்சந்திரன் பற்றிய கேள்விக்கு, பண்ருட்டி ராமச்சந்திரன் மீது அதிக மரியாதை இருக்கிறது. அவர் ஏன் இப்படி தரம் தாழ்ந்து சென்றுவிட்டார் என்று தெரியவில்லை. கட்சியின் அடிப்படை கட்டமைப்பு முதல் அனைத்து நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமி பக்க்மே இருக்கிறார்கள். கட்சியின் ஆண்டு விழா முதல் ஆர்ப்பாட்டம் வரை அனைத்தையும் நடத்தி வருகிறோம். ஓபிஎஸ் தரப்பில் ஏதாவது செய்யப்பட்டுள்ளதா? பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு மக்கள் மத்தியில் நல்ல இமேஜ் உள்ளது. கூடா நட்பு கேடாய் முடியும். அதனால் பண்ருட்டி ராமச்சந்திரன் கூடா நட்பை தவிர்ப்பது நல்லது என்று தெரிவித்தார்.
திமுக - பாஜக கூட்டணி?
தொடர்ந்து திமுக - பாஜக கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு, திமுக எப்போதும் சந்தர்ப்பவாத அரசியல் செய்யும். ஆனால் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை பாஜக தான் முடிவு எடுக்க வேண்டும். பாஜக, அதிமுகவுடன் தோழமையுடன் செயல்பட்டு வருகிறது. இதனை அண்ணாமலை, சிவி சண்முகம் என அனைவரும் தெளிவுபடுத்தியுள்ளனர். அதிமுக தலைமையில் தான் எப்போதும் கூட்டணி அமையும். பாஜக எங்களுடன் நட்பில் இருக்கிறது என்று தெரிவித்தார்.
தேர்தல் பணிகள்
பின்னர், அதிமுக தரப்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை செய்து வருகிறோம். பூத் கமிட்டி தொடங்கி மக்களை சந்தித்து திமுகவின் ஆட்சியின் பிரச்சினைகளை கூறி வருகிறோம். 2024ல் எங்கள் தலைமையை ஏற்று எந்தெந்த கட்சிகள் வருகிறதோ, அப்போது அறிவிப்பு வரும். அதனை எடப்பாடி பழனிசாமி முறையாக தேர்தல் நேரத்தில் அறிவிப்பார் என்று தெரிவித்தார்.