அதிமுகவிற்கு இது மிக முக்கியமான தேர்தல்! பெரும் சவாலை சந்திக்க போகும் எடப்பாடியார்?
சென்னை: 2021 சட்டசபை தேர்தல் அதிமுகவிற்கு மிக முக்கியமான தேர்தல்.. இதில் கிடைக்கும் வெற்றியும், தோல்வியும் அதிமுக தலைமையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதுதான்.
தமிழகத்தில் ஆளும் கட்சி ஐந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்தது கடந்த 30 வருடங்களில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மட்டுமே. 2016 தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டார்.
இவரது இந்த அணுகுமுறைக்கு வெற்றியும் கிடைத்தது. இதற்கு முக்கிய காரணம், அதிமுகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளாமல் போனது தான். தனித் தனியாக களம் கண்டதால் தோற்றுப்போயின,.
அதிமுக மோதுகிறது
ஆனால் இந்த முறை அப்படி இல்லை. சட்டசபை தேர்தலில் திமுக தலைமையில் மிகப்பெரிய அளவில் எதிர்க்கட்சிகள் அணி திரண்டுள்ளன. ஆனால் அதிமுக கடந்த தேர்தலில் கூட்டணியில் இருந்த தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி ஆகியவை இல்லாமல் தேர்தலை சந்திக்க போகிறது.
ஸ்டாலின்
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக என்பது ஓபிஎஸ்,இபிஎஸ் ஆகியோரின் தலைமைக்கு மாறி உள்ளது. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து அதிமுக சட்டசபை தேர்தலை சந்திக்கிறது. இதேபோல் கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுக என்பது ஸ்டாலின் தலைமையின் கீழ் வந்து விட்டது ஸ்டாலினை முதல்வராக அறிவித்து சட்டசபை தேர்தலில் திமுக எதிர்கொள்கிறது. திமுகவை பொறுத்தவைரை ஜெயித்தாலும் தோற்றாலும் வழக்கம் போல் ஸ்டாலினே தலைமையில் இருப்பார்கள்.
அதிமுக வென்றால் மாறும்
இதேபோல் அதிமுகவை பொறுத்தவரை இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் அதன் தலைவராக எடப்பாடி பழனிசாமி உருவெடுப்பார். தனிப்பெரும் தலைவராக எடப்பாடி பழனிசாமி கொண்டாடப்படுவார். கட்சியிலும் ஆட்சியிலும் முழு அதிகாரமும் எடப்பாடி பழனிசாமி கைக்கு வந்துவிடும். அதிமுகவில் எல்லோருமே எடப்பாடியாரின் ஆதரவாளர்களாக மாறிவிடுவார்கள். கொங்கு மண்டலம், மேற்கு மண்டலம் மட்டுமின்றி தென் மண்டலம் என அனைத்து மண்டலத்திலும் கட்சியிலும் முழு அதிகாரம் உள்ளவராக மாறிவிடுவார்.
தலைமையை ஏற்பார்களா
ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கும் அதிமுக தலைவர்களுக்கும் இந்த தேர்தல் களம் கடும் சவால் நிறைந்ததாக உள்ளது. மக்களை கவர எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தான் நிகழ்த்திய சாதனைகளை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இவரது தலைமையை மக்கள் ஏற்பார்களா அல்லது நிராகரிப்பார்களா என்பது மே 2ம் தேதி தெரிந்துவிடும். மொத்தத்தில் இந்த தேர்தல் அதிமுகவிற்கும், எடப்பாடி பழனிசாமிக்கு மிக முக்கியமான தேர்தல்.