கொட்டும் மழைக்கு மத்தியில்.. முதல்வர் ஸ்டாலினிடம் ஆசி பெற்ற மணமக்கள்.. சென்னையில் நெகிழ்ச்சி!
சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடாமல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இன்றும் பல இடங்களில் மழை நின்றபாடில்லை. 2015-ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் மிக அதிக மழை பெய்துள்ளது.
இதனால் ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளைக்காடாக காட்சியளிக்கிறது. எழும்பூர், வடபழனி, சைதாப்பேட்டை, கிண்டி என நகரின் முக்கிய இடங்களும், தாம்பரம், வேளச்சேரி உள்ளிட்ட புறநகர் பகுதிகளும் பேய் மழை கொட்டியது.

சென்னையில் வெள்ளம்
தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சென்னையின் முக்கிய சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளத்தில் சிக்கியவர்களை மாநில போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர். பல இடங்களில் வீடுகளின் மாடி வரை வெள்ளநீர் தேங்கியதால் அவர்களை படகுகள் மூலம் மீட்டனர். சாலை போக்குவரத்து பல இடங்களில் முடங்கியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னையில் மழை மீட்பு பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வட சென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களையும் அவர் வழங்கினார்.

அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 2-வது நாளாக மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார். துறைமுகம், ராயபுரம், ஆர்.கே.நகர், கொடுங்கையூர், அன்னை சத்யா நகர் ஆகிய பகுதிகளில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்கும் முகாம்கள், மருத்துவ முகாம்கள் ஆகியவற்றை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின் மீட்பு பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

புதுமண தம்பதிகள்
இதேபோல் சென்னை பெரம்பூர் பாரதி நகர் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு ஆய்வு கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று திருமணம் முடித்த பெரம்பூர் பகுதியை சேர்ந்த மணமக்கள் கௌரிசங்கர்- மஹாலக்ஷ்மி தம்பதியினர் மணக்கோலத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். முதல்வர் ஆய்வு செய்வதை பார்த்த மணமக்கள் கொட்டும் மழைக்கு மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அருகில் வந்தனர்.

முதல்வரிடம் ஆசி
இதனை தொடர்ந்து மணமக்கள் கௌரிசங்கர்- மஹாலக்ஷ்மி தம்பதியினர் முதல்வர் மு.க.ஸ்டாலின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். முதல்வர் அவர்களை வாழ்த்தினார். மேலும், வெள்ள பாதிப்புகளை களத்தில் இறங்கி கண்காணிக்கும் ஸ்டாலினுக்கு மணமக்கள் பாராட்டு தெரிவித்தனர். ஓயாமல் கொட்டி தீர்க்கும் மழைக்கு மத்தியில் புதுமண தம்பதிகள் முதல்வரை சந்தித்து ஆசி பெற்றது அந்த பகுதியில் இருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications