அலட்சியமாக இருப்பதா.. சென்னை மாநகராட்சி அதிரடி.. ஜோமாட்டோ நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்
சென்னை: ஆன்லைன் உணவு நிறுவனமான ஜோமாட்டோ மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஆனால் இந்த முறை உணவு சப்ளை காரணமாகவோ அல்லது அதன் டெலிவரி நபர்களாலோ கிடையாது, கொசுவினால்.
சென்னையிலுள்ள, ஜோமாட்டோ நிறுவனத்தின் அலுவலகத்தில் ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாவது கண்டுபிடிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி, சென்னை மாநகராட்சி ஜோமாட்டோவிற்கு, ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
அக்டோபர் 18ஆம் தேதி, கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையின்போது இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றப்பத்திரிகை மீது விசாரணை தொடக்கம்
கொசு உற்பத்தி
சென்னை மாநகராட்சி அதிகாரிகள், ஜோமாட்டோ நிறுவனத்தில் பராமரிக்கப்படும் தூய்மை குறித்து, ஆய்வு செய்ய, சென்னையில் உள்ள ஜோமாட்டோ அலுவலகத்திற்குச் சென்றபோது, பயன்படுத்தப்படாத உணவுப் பைகள் அதன் கூரையில் பரவியிருப்பதைக் கண்டார்கள். அந்த பைகளில் நிறைய தண்ணீர் இருந்தது, இதன் காரணமாக அதில் கொசுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது தெரியவந்தது.
பைகளில் தண்ணீர்
வாடிக்கையாளர்களுக்கு வழங்க எடுத்துச் சொல்லப்படும் பைகளை உரிய வகையில் அப்புறப்படுத்தாமல், சும்மா விட்டதால் கொசு உற்பத்தியாவதாக கூறி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டெங்கு ஒழிப்பு
சமீபகாலமாக, சென்னை உட்பட தமிழகம் முழுக்க, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் மட்டும் 1000த்திற்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கொசு ஒழிப்பு
டெங்கு பாதிப்பை குறைப்பதற்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையில் மாநில அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அதிகாரிகள் சென்று சோதனை நடத்தியபோது, இதுபோல அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.