கடவுளை ஆஜர்படுத்த உத்தரவிடுவதா..? கீழ்கோர்ட்டுக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: சிலைக்கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட சிலையை ஆய்வு செய்வதற்காக கடவுள் சிலையை ஆஜர்படுத்த உத்தரவிட்ட கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், சிவிரிபாளையத்தில் உள்ள பரமசிவன் சுவாமி கோவிலில் இருந்த மூலவர் சிலை கடத்தப்பட்டிருந்தது. சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர், அந்த சிலையை மீட்டு, கும்பகோணம் சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

பின், அந்த சிலை, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, மீண்டும் கோவிலில் நிறுவப்பட்டது. இந்நிலையில், வழக்கு விசாரணையின் போது, ஆய்வு செய்வதற்காக சிலையை ஆஜர்படுத்தும்படி, கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சிலையை எடுக்க கோவில் செயல் அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதை எதிர்த்து சிவிரிபாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி உள்பட நான்கு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், சிலையை கடவுளாக மக்கள் நம்பும் நிலையில், நீதிமன்றம் கடவுளை ஆஜர் படுத்துமாறு சம்மன் செய்ய முடியாது என்று கூறி, அதனை ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்ட நீதிமன்றத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும், சிலையை ஆய்வு செய்ய வேண்டுமானால், வழக்கறிஞர் ஆணையரை நியமித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும், சிலையை பீடத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டியதில்லை என்றும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications