அதிமுகவை தாக்கும் 'பூகம்பம்'- எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தும் 'டெல்லி செங்கோட்டையன் நிலநடுக்கம்'!
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பகிரங்கமாகவே அறிவித்துவிட்டார்; ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ, பாஜகவுடனான கூட்டணி குறித்த மழுப்பலான பதிலைத்தான் சொல்லி வருகிறார். இப்படி நழுவிக் கொண்டே போகும் எடப்பாடி பழனிசாமியை 'வழிக்குக் கொண்டு வரும்' மிரட்டல் ஆயுதமாக டெல்லியின் பிடிகளில் சிக்கி அதிமுகவின் ஷிண்டேவாக உருவெடுத்துள்ளார் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன்.
அதிமுகவில் காலந்தோறும் பல 'ஏக்நாத் ஷிண்டேக்களை' உருவாக்கிக் கொண்டுதான் இருக்கிறது டெல்லி பாஜக மேலிடம். ஆனால் எத்தனை 'ஷிண்டே'க்கள் வந்தாலும் எதிர்கொள்வோம் என்கிற அசால்ட்டில்தான் எடப்பாடி பழனிசாமியும் இருந்து வந்தார்.. இந்த வீராப்பு எல்லாம் டெல்லிக்கு போய் அமித்ஷாவை சந்திக்கும் வரைதான் இருந்தது. இப்போது எடப்பாடி பழனிசாமியை நெருக்க தொடங்கிவிட்டது பாஜக.

டெல்லியில் அமித்ஷாவுடனான சந்திப்புக்குப் பின்னர் அதிமுக- பாஜக கூட்டணி உறுதியான ஒன்றுதான் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, பாஜகவுடனான கூட்டணியை உறுதிப்படுத்தாமல் நழுவிக் கொண்டுதான் இருக்கிறார். பாஜகவைப் பொறுத்தவரை, ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அத்தனை பேரையும் சேர்த்த ஒருங்கிணைந்த அதிமுக- பாஜக கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, ஓபிஎஸ் உள்ளிட்ட பிரிந்து சென்றவர்களை நிச்சயம் சேர்க்கப் போவது இல்லை; அவர்களுக்கு பாஜக கோட்டாவில் சீட் கொடுத்து கொண்டால் எங்களுக்கு பிரச்சனை இல்லை என்கிற நிலைப்பாட்டில் பிடிவாதமாக நிற்கிறார்.
இதனை ரசிக்கவே ரசிக்காத டெல்லி மேலிடம், தமது புதிய ஏக்நாத் ஷிண்டேவாக களமிறக்கி இருக்கிறது மாஜி அதிமுக அமைச்சரான மூத்த அதிமுக தலைவர் கே.ஏ.செங்கோட்டையனை. அவரது திடீர் டெல்லி விசிட் இதனை பகிரங்கமாகவே உறுதி செய்திருக்கிறது. சரி செங்கோட்டையனை வைத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக டெல்லி என்ன எல்லாம் செய்யும் என்கிறீர்களா?
1) ஒருங்கிணைந்த அதிமுகவுடன் கூட்டணி என்பதற்கு எடப்பாடி பழனிசாமி உடன்படாத நிலையில் அவரது வசம் இருக்கும் பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்டு வைக்கும் வேலைகளை டெல்லி மேலிடம் தொடங்கும்.
2) ஏற்கனவே பாஜகவின் ஷிண்டேக்களாக, ஸ்லீப்பர் செல்களாக இருப்பவர்கள் மெல்ல மெல்ல பாஜகவுடனான கூட்டணி, ஒருங்கிணைந்த அதிமுக என்கிற கருத்துகளை வெளிப்படையாக பேசி எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுப்பார்கள்
3) அதிமுகவில் இப்படி வேகமெடுக்க போகும் அத்தனை கலகக் குரல்களையும் ஒருங்கிணைக்கிற புதிய ஷிண்டேவாக கே.ஏ.செங்கோட்டையன் செயல்படுவார்; அதிமுகவில் தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் குரு; அதிமுக வலிமையாக இருக்கும் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர்; ஓபிஎஸ்- தினகரன், சசிகலாவின் முழுமையான ஆதரவு பெற்றவர் என்பது உள்ளிட்ட காரணங்களால் கே.ஏ.செங்கோட்டையனை தமது ஆயுதமாக கையில் எடுக்கிறது டெல்லி.
4) கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட கலகக் குரல்கள் மீது எடப்பாடி பழனிசாமியால் உடனே நடவடிக்கை எடுக்க முடியாது; அப்படி ஒரு நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி எடுக்க வைக்க நெருக்கடி தந்தாக வேண்டும்; அதனால் அதிமுக பிளவுபடுவதாக தோற்றத்தை உருவாக்கி புதிய பொதுச்செயலாளராக செங்கோட்டையனை நியமிக்க வேண்டும்; எடப்பாடி பழனிசாமி இல்லாத ஒருங்கிணைந்த அதிமுக- பாஜக கூட்டணி அமைய வேண்டும் என்பதும் டெல்லியின் திட்டம்
5) மகாராஷ்டிராவின் பால்தாக்கரே உருவாக்கிய சிவசேனா கட்சி எப்படி ஏக்நாத் ஷிண்டேவுக்கு பாஜகவால் தாரைவார்க்கப்பட்டதோ அதேபோல எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக என்ற கட்சி, எடப்பாடி பழனிசாமியின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட கே..ஏ.செங்கோட்டையன் வசம் டெல்லி தாரைவார்க்கும்.
6) ஜெயலலிதா மறைவு, ஓபிஎஸ் தர்மயுத்தம், சசிகலா சிறைக்கு செல்ல வேண்டிய காலத்தில் அதிமுகவின் புதிய முதல்வர் பட்டியலில் முதலில் இருந்த கே.ஏ.செங்கோட்டையனையே அதிமுக- பாஜக கூட்டணி முதல்வர் வேட்பாளராகவும் முன் நிறுத்தும். இப்படித்தான் வியூகம் வகுத்து செங்கோட்டையனை களமிறக்கிவிட்டதாம் டெல்லி பாஜக மேலிடம். இதனால் அதிமுகவில் அடுத்தடுத்து புதிய புயல்கள், நிலநடுக்கங்கள் காத்திருக்கிறது என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications