விரக்தியில் பேசுகிறார் ஆளுநர்.. ஜி.யு.போப் - திருக்குறள் சர்ச்சைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி
சென்னை: டெல்லியில் இன்று திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்வில் பங்கேற்று சிறப்புரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி திருக்குறள் குறித்து சர்ச்சை கருத்து கூறியிருந்த நிலையில் அதற்கு எதிராக அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லி லோதி தோட்டத்தில் உள்ள டெல்லி தமிழ் கல்விக்கழக பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையைத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.
அதன் பின்னர் பேசிய அவர், ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பிலிருந்து பக்தி என்ற கண்ணோட்டம் நீக்கப்பட்டுள்ளது. பக்தி என்பதை வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் தவிர்த்துள்ளனர் என குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இந்த கருத்துக்கு தமிழ்நாடு தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், ஜி.யு.போப் மத உணர்வை திருக்குறளில் எதிரொலிக்கவில்லை எனும் விரக்தியின் வெளிப்பாடே ஆளுநர் பேச்சு என்று கூறியுள்ளார். டெல்லி லோதி தோட்டத்தில் உள்ள டெல்லி தமிழ் கல்விக்கழக பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையைத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். இதன் பின்னர் இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றிய அவர்,
"திருவள்ளுவர் நமது பிரபஞ்சத்தின் ஒரு விடிவெள்ளி. தற்போது திருக்குறள் என்பது ஒரு கருத்துரை, வாழ்வியல் அடங்கிய ஒரு புத்தகமாகச் சுருங்கிவிட்டதாகக் கருதுகிறேன், ஆனால் திருக்குறள் என்பது அதற்கு மேலானது. திருக்குறள் என்பது பக்தி, வாழ்வியல், பிரபஞ்சம் என அனைத்தையும் உள்ளடக்கியது. தமிழ்நாடு ஆளுநராக நான் பதவியேற்ற பின்னர் எனக்குத் திருக்குறள் புத்தகம் அதிக அளவில் பரிசாகக் கிடைத்தது" என்று கூறி தனது உரையை தொடர்ந்தார்.
மேலும், தொடர்ந்து பேசிய அவர் "இவ்வாறு பரிசாக கிடைத்த திருக்குறளில் பெரும்பாலானது ஜி.யு.போப் என்பவரின் ஆங்கில மொழிபெயர்ப்புதான். இவரின் மொழிபெயர்ப்புதான் திருக்குறளின் சிறந்த மொழிபெயர்ப்பு. தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியம் மிக மிகப் பழமையானது. இப்படியான பழமையான மொழியில் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே யோக கலையின் முக்கியத்துவத்தைத் தெரிவித்துள்ளனர். ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஒரு சந்தையாகவும், கலாச்சாரம் இல்லாத நாடாகக் காட்ட முயன்றனர்.
ஆனால், இந்தியா அவ்வாறு இல்லை, இந்தியா கலாச்சாரம் நிறைந்த, பண்பட்ட சமூகமாக அப்போதே இருந்துள்ளது. அதேபோல இந்திய நூல்களின் மொழிபெயர்ப்பாளர்களின் உள்நோக்கம் கொண்ட மொழிபெயர்ப்பை விடுத்து உண்மையான பொருட்களை வெளிக்கொணர வேண்டும். உதாரணமாக ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பிலிருந்து பக்தி என்ற கண்ணோட்டம் நீக்கப்பட்டுள்ளது. அனைத்துக்கும் பொதுவாகிய ஆதிபகவன் என்பதை மொழிபெயர்ப்புகளில் தவிர்த்துள்ளனர், பக்தி என்பதை வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் திருக்குறளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது" என்று தனது உரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஆளுநரின் பேச்சுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, "மதத்திற்கும், சாதிக்கும் முற்றிலும் எதிரானதும், உண்மையானதுமான ஆன்மீகத்தை பற்றி திருக்குறள் விவரிக்கிறது. ஜி.யு. போப் தமிழ் இலக்கியத்திற்கு அளித்திருக்கும் பங்களிப்பு அளப்பரியது. ஆளுநர் ரவியின் பேச்சு, தான் விரும்பும் மத உணர்வை திருக்குறள் பிரதிபலிக்கவில்லை என்ற விரக்தியின் வெளிப்பாடே ஆகும்.
வருணாசிரமதாரர்களின் இத்தகைய கருத்துக்கள் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும், தமிழ் பண்பாட்டிற்கும் எதிராக விடுக்கப்பட்டிருக்கும் சவால்" என குறிப்பிட்டுள்ளார். சமீப நாட்களாக பக்தி குறித்து ஆளுநர் தனது உரையில் அடிக்கடி குறிப்பிட்டு வரும் நிலையில் தற்போதைய அவரது சிறப்புரையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அமைச்சர் ஒருவர் கருத்து கூறியிருப்பதும் அரசியல் கலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக தசை சிதைவு நோய்..சிறுமி தான்யாவிற்கு 8 மணி நேரம் அறுவை சிகிச்சை..பழைய முகம்..அம்மா ஆனந்த கண்ணீர்