காசுக்காக நடந்த கொடூர கொலை! தொழிலதிபர் மனைவி கொன்று புதைப்பு! நன்றியுள்ள நாய் செய்த நெகிழ்ச்சி செயல்
சென்னை : சென்னையில் தொழில் அதிபர் மற்றும் அவரது மனைவி நகை மற்றும் பணத்துக்காக கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் அவர்களது உடலை தோண்டி எடுத்து கொண்டு சென்ற போது பண்ணை வீட்டில் வளர்த்த நாய் ஆம்புலன்ஸில் பின்னாலேயே ஓடி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
Recommended Video
சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் துவாரகா காலனியைச் சேர்ந்தவர் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் 60, இவரது மனைவி அனுராதா55.
கடந்த மாதம் அமெரிக்காவிலுள்ள மகள் சுனந்தாவின் பிரசவத்திற்காக சென்றுவிட்டு,கடந்த 7ஆம் தேதி அதிகாலை 03.30 மணிக்கு அமெரிக்காவிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளனர்.

சென்னையில் அதிர்ச்சி
அங்கிருந்து இவர்களது ஓட்டுநரான கிருஷ்ணா என்பவர் இவர்களை அழைத்து வந்து வீட்டில் இறக்கியுள்ளார். தனது தாய், தந்தை இருவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்ததால், சந்தேகம் அடைந்த சுனந்தா, தனது உறவினரான திவ்யாவை தொடர்புகொண்டு நேரில் சென்று பார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அதன்பேரில், திவ்யா தனது கணவர் ரமேஷ்சுடன் 12.30 மணி அளவில் வீட்டை வந்து பார்க்கும்போது வீடு பூட்டி இருந்தது.

கொடூர கொலை
அக்கம் பக்கம் இருப்பவர்களின் உதவியுடன் பூட்டை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்ததில், இருவரும் இல்லாத காரணத்தால் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல், உதவி ஆணையர் கவுதமன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, புகார் கொடுத்த 6 மணி நேரத்தில் போலீசார் ஓட்டுநரை பிடித்தனர்.

சிக்கிய ஓட்டுனர்
சரியாக மாலை 6.30 மணியளவில் கார் ஓட்டுநர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும், ஆந்திர மாநிலம் ஓங்கோல் சோதனை சாவடியில் வைத்து அவர் ஓட்டி சென்ற காருடன் பிடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, ஓட்டுனர் கிருஷ்ணாவிடம் மேற்கொண்ட விசாரணையில், ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா இருவரையும் மயிலாப்பூர் வீட்டிலேயே கொலை செய்து, கிழக்கு கடற்கரை சாலை, நெமிலிச்சேரி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்பட்டு வரும் இடத்திற்கு எதிரே ஸ்ரீகாந்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் புதைத்ததும் தெரிய வந்தது.

நகை பணம் கொள்ளை
மேலும், வீட்டில் இருந்த பல லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. கொலையாளி கிருஷ்ணா கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆடிட்டர் ஸ்ரீகாந்த் வீட்டில் பணியாற்றி வந்துள்ளார். இருவரின் சடலங்களும் கைப்பற்றிய மாமல்லபுரம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

வளர்ப்பு நாய்
இந்நிலையில் நேற்று மாலை அவர்களது உடலை தோண்டி எடுப்பதற்காக அப்பகுதி மயான ஊழியர்களை போலீசார் வரவழைத்து தோண்ட துவங்கினர். அப்போது பண்ணை வீட்டில் உள்ள நாட்டு நாய் ஒன்று ஊளையிட்டு அருகிலேயே நின்றது. போலீசார், தடயவியல் நிபுணர்கள் துரத்தியும் அங்கிருந்து போகவில்லை. ஸ்ரீகாந்த்- அனுராதா இருவரும் பண்ணை வீட்டுக்கு வரும்போது அதற்கு உணவளிப்பதாக கூறப்படுகிறது.
இதனால் இந்த நிலையில் இருவரின் உடல்களும் ஆம்புலன்சில் ஏற்றும் வரை அப்பகுதியை சுற்றி, சுற்றி வந்துள்ளது. பின்னர் ஆம்புலன்ஸ் மணலில் சிக்கியதும் ஓடிவந்து ஆம்புலன்ஸ் முன் நின்றது அனைவரும் துரத்தியதால் சோகத்துடன் சென்றது. இந்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications