'தமிழகத்தில் ஒருநாள் தாமரை மலர்ந்தே தீரும்'.. அப்படியே தமிழிசை டயலாக்கை கூறிய அண்ணாமலை.. பரபர பேச்சு
சென்னை: தமிழகத்தில் என்றாவது ஒரு நாள் தாமரை மலர்ந்தே தீரும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
Recommended Video
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

தனியே களம் காணும் பாஜக
வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வேட்புமனு பரிசீலனையும் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சி அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பாஜக இந்த முறை தனியாக களம் காண்கிறது.

வேகமாக வளர்ந்து வரும் கட்சி
இந்த நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக சார்பில் சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை பங்கேற்று வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் கட்சியினர் மத்தியில் பேசிய அவர் பாஜக குறுகிய காலத்தில் அதிக வேகமாக வளர்ந்து வரும் கட்சி என்று கூறினார்.

அனைத்து மதத்தினரையும் அரவணைத்து செல்கிறோம்
அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்லும் கட்சி பாஜக என்று கூறிய அவர் மக்கள் மாற்றத்துக்கு தயாராகி விட்டார்கள் என்றும் புதியவர்களை வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். எப்போதும் இல்லாத அளவுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் 8 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது என்று கூறிய அண்ணாமலை மக்கள் அளிக்கும் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும், நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று கூறினார்.

போலியான அரசியல் கட்டமைப்பு
தமிழகத்தில் ஒரு போலியான அரசியலை கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். அதன் மூலம் மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள் என்று கூறிய அவர் பாரதிய ஜனதா புதுவிதமான அரசியலை கையில் எடுத்துள்ளது. அதற்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது என கூறினார். இறுதியாக தமிழகத்தில் என்றாவது ஒரு நாள் தாமரை மலர்ந்தே தீரும் என்று கூறிய அண்ணாமலை இந்த லட்சியத்தை நோக்கி தொண்டர்கள் முன்னேறி செல்ல வேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications