முதல்வராகும் விஜய்.. எல்லாம் அந்த 35 நிமிடங்களில் தான் இருக்கு! தவெக வெற்றியில் இதை நோட் பண்ணீங்களா
சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களுடன் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஒரு வினோதமான சூழல் நிலவுகிறது. வழக்கமாக நமது நாட்டில் அரசியல்வாதிகள் இடைவிடாது பேசுவார்கள்.. ஆனால், வெற்றி பெற்று 48 மணிநேரம் கடந்தும் விஜய் இன்னும் மௌனம் காப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இந்திய அரசியலில் ஒரு அரசியல்வாதியின் முதன்மைப் பணியே பேசுவதுதான்.. நமது நாட்டில் எல்லா மாநிலங்களிலுமே அரசியல் தலைவர்கள் இந்த அணுகுமுறையைத் தான் கடைப்பிடிப்பார்கள். அதாவது பவரில் இல்லாமல் கூட இருப்பார்கள். ஆனால், செய்திகளில் இல்லாமல் இருக்க மாட்டார்கள். அப்படி செய்திகளில் இடம்பெறத் தொடர்ச்சியாகக் கருத்துகளைக் கூறிக் கொண்டே இருப்பார்கள்.

பேசவே இல்லை
ஆனால், விஜய் இந்த அரசியல் மரபையும் உடைத்துள்ளார். தேர்தலுக்கு முன்பும் விஜய் ஒரு முறை கூட பிரஸ்ஸை சந்திக்கவில்லை. மேலும், பல விஷயங்களில் மவுனமாகவே இருந்தார். தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. கட்சி சார்பாக அறிக்கை வந்துள்ளதே தவிர விஜய் இன்னும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஒரு வீடியோ கூட வெளியிடவில்லை.
வெறும் 35 நிமிடங்கள்
தேர்தலுக்கு முன்பும், எல்லா அரசியல் தலைவர்களும் மிகத் தீவிரமாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தனர். அப்போது பிரச்சாரத்தின் இறுதி வாரத்தில் விஜய் பேசிய நேரம் வெறும் 35 நிமிடங்கள் மட்டுமே. ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் அந்த கடைசி வாரம் மு.க. ஸ்டாலின் 356 நிமிடங்களும், எடப்பாடி பழனிசாமி 806 நிமிடங்களும் உரையாற்றி இருந்தார். மற்ற தலைவர்கள் அலை அலையாய் உரையாற்றியபோது, விஜய் மிகக் குறைவான நேரமே பேசினார். தனது இமேஜ்ஜை மட்டுமே நம்பி களமிறங்கினார்.
அதேநேரம் சிலர் விஜய்யை அதிமுக நிறுவனர் எம்ஜிஆருடன் ஒப்பிட்ட நிலையில், அது 'நியாயமற்றது' என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள். ஏனென்றால் எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பிக்கும் முன்பு 20 ஆண்டுகள் அரசியலில் இருந்தவர். திமுகவில் பொருளாளராக இருந்தவர்..இரண்டு முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகுதான் முதலமைச்சர் ஆனார். ஆனால், விஜய் கட்சி ஆரம்பித்து இரண்டே ஆண்டுகளில், தனது இமேஜ்ஜை மட்டும் வைத்துத் தேர்தலில் வென்றுள்ளார்.
ஷூட்டிங் போல
மேலும், விஜய்யின் பிரச்சார உத்திகள் ஒரு சினிமா படப்பிடிப்பைப் போலவே இருந்ததாக விமர்சனங்கள் எழுந்திருந்தன. சில இடங்களில் விஜய்க்குப் பதிலாக ஹாலோகிராம் தொழில்நுட்பமும், ஸ்டண்ட் கலைஞர்களும் பயன்படுத்தப்பட்டனர். பொதுக்கூட்டங்களில் பேசும்போது தவறு செய்தால், படப்பிடிப்பில் செய்வது போலவே மன்னிக்கவும் என்று கூறிவிட்டு மீண்டும் முதலிலிருந்து பேசினார்.
வெற்றி
குறிப்பாக "வேட்பாளர் யார் என்று யோசிக்காதீர்கள், ஒவ்வொரு தொகுதியிலும் நானே நிற்பதாக நினைத்து எனக்கு வாக்களியுங்கள்" என்பதே அவரது எளிய மந்திரமாக இருந்தது. அதுவே பெரியளவில் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. ஆனால், 7.5 கோடி மக்களைக் கொண்ட ஒரு மாநிலத்தை நிர்வகிப்பதற்குக் கொள்கை முடிவுகள், அதிகார வர்க்கத்துடனான தொடர்பு மற்றும் ஊடகங்களை எதிர்கொள்ளும் திறன் அவசியம். இதுவரை விஜய் அதில் எந்த ஈடுபாட்டையும் காட்டவில்லை என்பதுதான் நிதர்சனம்.
ஆனால், இதைக் கடந்தும் விஜய்யை மக்கள் தேர்வு செய்துள்ளனர். இப்போது பெரும்பான்மைக்கு சில இடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், அதைத் திரட்டும் முயற்சிகளும் நடந்து வருகிறது. அதாவது விஜய் பேசவில்லை என்றாலும் அவரது வெற்றி பேசுகிறது.












Click it and Unblock the Notifications