2 எம்.பி.க்களை தாரை வார்த்த அதிமுக.. ஓவர் டேக் செய்த திமுக.. ராஜ்யசபாவில் 10-ஆக கூடுகிறது பலம்!
சென்னை: மாநிலங்களவையில், அதிமுக உறுப்பினர்கள் பலம் குறைந்து, திமுக உறுப்பினர்கள் பலம் அதிகரித்துள்ளது. சட்டசபை தேர்தலுக்காக 2 எம்.பி.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டதால், இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது அதிமுக.
ராஜ்யசபா என்று அழைக்கப்படுவது மாநிலங்களவை. இதன் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 245 ஆகும். மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் ஆறு ஆண்டுகள்.
இதில் 12 நியமன உறுப்பினர்கள் ஆவர். தமிழகத்தில் இருந்து 18 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தமிழகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 235 ஆகும். அதில் ஒருவர் நியமன உறுப்பினர். தமிழகத்தில் இருந்து ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கு சுமார் 34 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவை.

இருவர் ராஜினாமா
கடந்த சட்டசபை தேர்தலின்போது, அ.தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி.முனுசாமியும் ஆர்.வைத்திலிங்கமும் களமிறங்கினர். இருவரும் முறையே வேப்பனஹள்ளி, ஒரத்தநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதையடுத்து, முனுசாமியும், வைத்திலிங்கமும் எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்கள். இதில், வைத்திலிங்கத்தின் பதவிக்காலம் முடிவடைய ஒரு வருடமும், முனுசாமியின் பதவிக்காலம் நிறைவடைய 5 வருடங்களும் இருந்தன.

தாரை வார்த்த அதிமுக
தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க கூட்டணி 75 இடங்களில் வென்றுள்ளது. எனவே திமுகவை சட்டசபையில் எதிர்கொள்ள மூத்த தலைவர்கள் தேவை என்பதால், இவ்விருவரும், ராஜ்யசபா எம்.பி., பதவிகளை ராஜினாமா செய்ததாக, அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திமுக ராஜ்யசபா உறுப்பினர்கள்
அ.தி.மு.கவில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த முகமது ஜான் கடந்த மார்ச் மாதம் மரணமடைந்துவிட்டார். இதையடுத்து, அந்த இடத்திற்கு நடந்த தேர்தலில், திமுகவின் புதுக்கோட்டை அப்துல்லா போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராகினார். தற்போது, ராஜ்யசபாவில், திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர் இளங்கோ, பி.வில்சன், எம்.சண்முகம் மற்றும், புதுக்கோட்டை அப்துல்லா ஆகியோர் திமுக சார்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இரு இடங்களுக்கு தேர்தல்
இந்த நிலையில்தான், காலியாக உள்ள 2 இடங்களுக்கான திமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் பட்டியலை இன்று முதல்வரும், திமுக தலைவருமான, ஸ்டாலின் அறிவித்தார். தியாகராயநகர் தொகுதியில் 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டவர் டாக்டர் கனிமொழி. இவர், திமுக முன்னோடி என்.வி.என்.சோமுவின் மகளாகும். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் ஆகியோர், திமுக சார்பிலான வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுகவை முந்திய திமுக
எம்.எல்.ஏக்களில் பெரும்பகுதியினர் தி.மு.க பக்கம் இருப்பதால் ஒவ்வொரு ராஜ்ய சபா இடத்திலும் பெரும்பான்மை என்ற அடிப்படையில் தி.மு.கவே வெற்றி பெறும். அக்டோபர் 4ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றபோதிலும், பெரும்பான்மை இருப்பதால், ராஜ்யசபா தேர்தலில் போட்டியின்றி இருவரும் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. இப்போது அதிமுகவுக்கு மாநிலங்களவையில், 6 எம்.பி.க்கள்தான் உள்ளனர். திமுக பலம் 10ஆக உயர்ந்துள்ளது. 10 வருடங்களுக்கு பிறகு, ராஜ்யசபாவில் திமுக, அதிமுகவை பெரும் வித்தியாசத்தில் முந்திவிட்டது. இதன் மூலம், லோக்சபாவிலிருந்து தேர்வாகி வரும் சட்ட மசோதாக்கள் மீது ராஜ்யசபாவில் ஓட்டெடுப்பு நடைபெறும்போது, திமுக கை ஓங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தவறான முடிவு?
கடந்த சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா பணியில் புது முகங்களுக்கு வாய்ப்பளிக்காமல், இந்த முறை மக்களால் அறிந்த முகங்களுக்கும், கட்சியில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களுக்குமே அதிமுகவில் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. அந்த பட்டியலில் கே.பி. முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. அதிமுக எம்.பி. முகமது ஜான் மரணமடைந்ததால் நடத்தப்பட்ட தேர்தல் காரணமாக இந்த இடம் திமுக பக்கம் வந்ததது. ஆனால் மற்ற இரண்டு இடங்களும் முழுக்க முழுக்க அதிமுகவின் தவறான முடிவின் காரணமாகவே திமுகவுக்குக் கிடைத்துள்ளது. அங்கு வேறு தலைவர்களைப் போட்டியிட வைத்திருந்தால் இப்போது ராஜினாமாவும் தேவையில்லை, அது திமுக பக்கமும் போயிருக்காதே என்கிறார்கள் அரிசயல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications