சந்திரயான் 2ஐ கண்டுபிடிக்க..நாசாவுக்கே உதவிய தமிழர்! சந்திரயான் 3ல் மாடலுடன் களமிறங்கினார்! திக் திக்
சென்னை: சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்து நொறுங்கிய போது அதை கண்டுபிடிக்க உதவிய தமிழர்.. இந்த முறை சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளார்.
கடந்த ஜூலை 22, 2019ம் ஆண்டு நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் 2ல் இருக்கும் ஆர்பிட்டர் அதே வருடம் செப்டம்பர் மாதம் 6ம் தேதி நிலவின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது. ஆனால் அதன் லேண்டர் விக்ரம் தரையில் இறங்கும் முன் 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன்பின்னர்தான் நிலவின் தென் துருவ பகுதியில் சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

3 மாதமாக இஸ்ரோ தீவிரமாக தேடியது. அதன்பின் இதை நாசா கண்டுபிடித்தது. அப்போது இந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க நாசாவிற்கு உதவியதே சண்முக சுப்ரமணியன் என்ற தமிழர்தான்.
விக்ரம் லேண்டர் நிலவில் சாப்ட் லேண்டிங் முறையில் இறங்கி இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. சாப்ட் லேண்டிங் என்பது, விக்ரம் லேண்டரில் இருக்கும் எஞ்சின்களை எதிர் திசையில் இயக்கி மிகவும் மெதுவாக நிலவில் இறங்குவார்கள். ஆனால் அப்படி நடக்காமல் நிலவில் விக்ரம் லேண்டர் வேகமாக மோதியுள்ளது.
இதனால் சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் உடைந்து நொறுங்கி இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் இது தொடர்பாக அப்போது எந்த விதமான உறுதியான தகவலும் வெளியாகவில்லை. இந்த விக்ரம் லேண்டரை தொடர்ந்து சந்திரயான் 2ல் இருக்கும் ஆர்பிட்டர் சாட்டிலைட் தேடி வந்தது.
கண்டுபிடித்த தமிழர்: அதேபோல் அமெரிக்காவின் நாசாவின் LRO (Lunar Reconnaissance Orbiter) விண்கலம் விக்ரம் லேண்டரை தீவிரமாக தேடி வந்தது. இந்த தேடுதல் பணியில் சீனா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தொழில்நுட்ப விஞ்ஞானிகளும் ஈடுப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பின் 2019 டிசம்பர் மாதம் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது.
நாசாவின் LRO (Lunar Reconnaissance Orbiter) விண்கலம் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவியதே ஒரு தமிழர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம், சண்முக சுப்ரமணியன் என்ற தமிழர்தான் விக்ரம் லேண்டர் எங்கு இருக்கலாம் என்ற க்ளூவை நாசாவிற்கு அனுப்பி இருக்கிறார். இதற்காக நாசா அவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டர் பயணித்த பாதை மற்றும் அது மோதுவதற்கு முன் சென்ற இடம் ஆகியவற்றை வைத்து இவர் இந்த இடத்தை கண்டுபிடித்துள்ளார்.
நிலவில் சில பகுதிகளை குறிப்பிட்டு, இங்கு ஒருவேளை விக்ரம் லேண்டர் விழுந்து இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டு நாசா அதே இடத்தில் மீண்டும் சோதனை செய்தது. கடைசியில் அங்கு விக்ரம் லேண்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
நாசா இது தொடர்பாக செய்துள்ள டிவிட்டில், நீங்கள் குறிப்பிட்டது போல விக்ரம் லேண்டர் விழுந்ததாக கருதப்பட்ட பகுதியில் மீண்டும் ஆய்வு செய்தோம். அங்கு விக்ரம் லேண்டர் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. நாசாவின் LROC மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டது. உங்களின் ஐடியாவிற்கு நன்றி, வாழ்த்துக்கள் என்று நாசா கூறியுள்ளது.
பேட்டி: இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், விக்ரம் லேண்டர் தரையிறங்குவது பற்றி கவனித்து வருகிறேன். ஆர்வமாக இதை கவனித்துக்கொண்டு இருக்கிறேன். இந்த நிகழ்வை பார்க்க நான் அலுவலகத்தில் இருந்தே விடுமுறை எடுத்துள்ளேன்.
ஏற்கனவே சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் தளத்தின் டிஜிட்டல் எலிவேஷன் மாடல்களையும், அந்த பகுதியில் சுற்றிலும் உள்ள அனைத்து பள்ளங்கள் மற்றும் மலைகளையும் டிஜிட்டல் முறையில் தயார் செய்துள்ளேன்... ஏற்கனவே பொது தளத்தில் உள்ள தகவல் மற்றும் புகைப்படங்களிலிருந்து இந்த மாடல்களை உருவாக்கி உள்ளேன்.
அங்கே உள்ள மலைகளின் உயரங்கள், பள்ளங்கள் உயரங்களை கணக்கிட்டு வைத்து உள்ளேன்., என்று சண்முக சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications