தமிழக அரசுக்கு கொடுத்த கெடு முடிந்தது.. 31ம் தேதி கோட்டையை முற்றுகையிடுவது உறுதி- அண்ணாமலை அறிவிப்பு
சென்னை : நாளை தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி 3 மணி நேரம்தான் இங்கு இருப்பார். அப்போது அவரை சந்தித்து பாஜக வளர்ச்சி பற்றி பேசுவோம் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னையில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு திமுக அரசே காரணம் எனக் குற்றம்சாட்டினார்.
மேலும், பிரதமர் மோடி நாளை தமிழகம் வர இருப்பது குறித்தும் பேசினார். தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்காத மாநில அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் எனவும் உறுதியாகத் தெரிவித்தார்.

பிரதமர் தமிழகம் வருகை
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, "நாளை பிரதமர் நரேந்திர மோடி, 31,600 கோடி ரூபாய் மதிப்புள்ள மத்திய அரசின் திட்டங்களை, நிறைவடைந்த பணிகளை துவக்கி வைக்க தமிழ்நாட்டுக்கு வருகிறார். நாளை மாலை 5.10க்கு வந்து நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். 8 மணிக்கு மீண்டும் டெல்லி கிளம்புகிறார். பிரதமர் தமிழகத்தில் இருப்பது 3 மணி நேரம் மட்டும்தான்.

அரசியல் பேசுவோம்
மிக முக்கியமாக தமிழகத்தில் ஐந்து ரயில் நிலையங்களின் சீரமைப்பு பணி நடக்கிறது. கதி சக்தி திட்டத்தில் சென்னை துறைமுகம் பகுதியில் தளவாட பூங்கா திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் இங்கு இருக்கும் 3 மணி நேரத்திற்குள், பாஜக தலைவர்கள் பிரதமரை சந்திப்போம். ஏனென்றால் எங்கள் கட்சியைச் சேர்ந்த பிரதமர் அவர். பிரதமர் மோடி டெல்லி செல்வதற்கு முன்பு அவரைச் சந்தித்து உரையாடுவோம். தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் நிலை, பாஜக எப்படி வளர்ந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து பாஜக தலைவர்கள் பிரதமரிடம் பேசுவார்கள்." எனத் தெரிவித்தார்.

கருத்து சுதந்திரம்
மேலும் பேசிய அண்ணாமலை, பொதுவாக பாஜக, பத்திரிகைகளை மிரட்டுகிறது என்று திமுகவினர் பேசுவார்கள். கருத்து வேறுபாடு இருந்தாலும், தங்கள் கருத்தை சொல்லும் உரிமை பத்திரிகைகளுக்கு உண்டு என நினைக்கும் கட்சி பாஜக. பாஜக பிரமுகர் பாலச்சந்தர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து 3 நாளாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் கொல்லப்பட்டும் விட்டார். ஆனால் ஒரு நிறுவனம் புகார் கொடுத்த 24 மணி நேரத்திற்குள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதில் காட்டப்படும் அவசரம் சந்தேகத்தைக் கிளப்புகிறது.

கோட்டை நோக்கி போராட்டம்
பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்காக தமிழக அரசுக்கு கொடுத்திருந்த 72 மணி நேர கெடு இன்றோடு முடிவடைகிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வரும் 31ஆம் தேதி காலையில் பாஜக தலைவர்கள், தொண்டர்கள் சென்னை கோட்டையை நோக்கி வரத்தான் போகிறோம். கோட்டையை முற்றுகையிடத்தான் போகிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications