"நோ".. மோடி பற்றி தப்பா பேசறாங்க.. எங்களையும் பேச விடறது இல்லை.. பாஜக தலைவர்கள் எடுத்த திடீர் முடிவு
டிவி விவாதங்களில் பாஜகவினர் கலந்து கொள்ள போவதில்லை என முடிவெடுத்துள்ளனராம்
சென்னை: "பிரதமர் மோடி பற்றி தப்பு தப்பா பேசறாங்க.. எங்களையும் பேச விடறது இல்லை.. நெறியாளர்களும் எதையும் ஒழுங்குப்படுத்துவதும் இல்லை.. அதனால் நாங்க யாருமே இனிமேல் டிவி விவாதங்களில் கலந்து கொள்ள போவதில்லை" என்று பாஜகவினர் முடிவு செய்துள்ளனர்.
தற்போதைய சூழலில், டிவி சேனல்களில் விவாத நிகழ்ச்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.. தினந்தோறும் தமிழகம் சந்திக்கும் பிரச்சனைகளை, ஆரோக்கியமான விவாதமாக நடத்தி, அதன்மூலம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை கொண்டு சேர்ப்பதும், மக்களை தெளிவுபடுத்துவதும் அவசியமாகிறது.
ஆனால், இப்படித்தான் டிவி விவாதங்கள் நடக்கிறதா என்பதை முழுமையாக அறுதியிட்டு சொல்ல முடியவில்லை..!
கருத்து மோதல்
சில சமயம் விவாதம் நடந்து கொண்டிருக்கும்போதே கருத்து மோதல் முற்றி சண்டையில் போய் முடிந்த சம்பவங்களும் நடந்துள்ளன.. சில சமயம், எச்.ராஜா, சீமான் போன்றோர் டென்ஷன் அடைந்து கூச்சலிட்டு, மைக்கை கழட்டிபோட்ட சம்பவமும் நடந்துள்ளன.. சில சமயம், வைகோ போன்றோர் கடுப்பாகி பாதியிலேயே விவாதத்தில் இருந்து எழுந்து போய்விட்ட சம்பவமும் நடந்துள்ளது..!
முக்கியத்துவம்
அந்தவகையில் பாஜகவினரும் டிவி விவாதங்களில் கலந்து கொண்டு வருகின்றனர்.. அதிலும் வானதி சீனிவாசன், கேடி ராகவன், கரு.நாகராஜன் போன்றோர் விவாதங்களில் பேசினால் அனல் பறக்கும்.. ஆனால், சமீப காலமாக அவர்களுக்கு விவாதங்களில் முக்கியத்துவம் தருவதிலலை என்றும், தங்கள் கருத்தை தெரிவிக்க போதிய நேரம் கொடுப்பதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன. எனவே, இனி யாரும் விவாதங்களில் கலந்து கொள்ள போவதில்லை என்று முடிவையும் இவர்கள் ஒன்றுகூடி சேர்ந்து எடுத்துள்ளதாக தெரிகிறது.
விவாதம்
தமிழக பாஜக நிர்வாகிகள் பங்கேற்ற முக்கிய ஆலோசனை கூட்டம், சென்னை, திநகரில் உள்ள கமலாலயத்தில், நடந்தது... தமிழக மாநில தலைவர் எல். முருகன், மூத்த தலைவர் இல.கணேசன், அமைப்பு பொதுச்செயலர் கேசவவினாயகம், துணை தலைவர்கள் விபி துரைசாமி, எம்என்ராஜா, எம்எல்ஏ க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், மாநில பொது செயலர்கள் கரு.நாகராஜன், கேடி ராகவன், நடிகை குஷ்பு மற்றும் டிவி விவாதங்களில் பங்கேற்பவர்கள் என பலரும் இதில் பங்கேற்றனர்.
பாஜக
அப்போதுதான் இந்த முடிவை ஒருமித்து எடுத்ததாக தெரிகிறது.. காரணம், டிவி விவாத நிகழ்ச்சிகளில், பாஜக சார்பில் பங்கேற்பவர்களுக்கு, தங்கள் கருத்தை தெரிவிக்க போதிய நேரம் கொடுப்பதில்லை என்றும் அவர்களின் கருத்துக்களை தெரிவிக்கும் போது, எதிர் தரப்பினர் பேச விடாமல், தங்களின் கருத்துக்களை சொல்வது போல், மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சிக்கின்றனர்.
புறக்கணிப்பு
அதை ஒழுங்குப்படுத்த வேண்டிய நெறியாளர்களும், நடுநிலையாளர்களாக இருப்பதில்லை... விவாதங்களில் பங்கேற்கும் பாஜகவினர், ஒருதலைபட்சமாகவும், பாரபட்சமாகவும் நடத்தப்படுகின்றனர்... அதனால், தற்காலிகமாக விவாத நிகழ்ச்சிகளில், பாஜக சார்பில் யாரும் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.