தீரன் பட நிஜ வில்லன்.. சென்னையில் பதுங்கி இருந்த "பவாரியா" கும்பலின் தலைவன்.. 15 ஆண்டுக்கு பின் கைது
சென்னை: சென்னையில் பதுங்கி இருந்த "பவாரியா" கும்பலின் தலைவன் ஜெயில்தார்சிங்கை 15 வருடங்களுக்கு பின் போலீசார் கைது செய்துள்ளனர்.
இயக்குனர் வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் தீரன் அதிகாரம் ஒன்று. தமிழ்நாட்டில் பவாரியா கொள்ளை கும்பல் செய்த திருட்டு மற்றும் கொலை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது.
உண்மை சம்பவங்களை மையங்களாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது.

தீரன் படம்
இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் கார்த்தி, ராஜஸ்தான், பீகார், உத்தர பிரதேசம், டெல்லி என்று பல மாநிலங்களுக்கு சென்று பவாரியா கும்பலை பிடிப்பது போல கதை அமைக்கப்பட்டு இருக்கும். பவாரியா கும்பலின் தலைவன் ஓமாவை கடைசியில் கைது செய்வதோடு படம் முடிந்துவிடும். இது கதை.. நிஜத்தில் பவாரியா கும்பலின் தலைவன் பெயர் ஜெயில்தார்சிங்.

பவாரியா கும்பல்
ஜெயில்தார்சிங் தலைமையிலான பவாரியா கும்பல்தான் 2000ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து 2006 வரை தமிழ்நாடு முழுக்க பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். முக்கியமாக சேலம் மாவட்டத்தில் இருக்கும் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சேலம் தாளமுத்து நாராஜன் வீட்டில் கடந்த 2002ல் கொள்ளையடித்தனர். இதில் தாளமுத்து நடராஜன் சம்பவம் இடத்திலேயே கொலை செய்யப்பட்டார்.

பவாரியா கும்பல் தீரன்
துப்பாக்கியால் சுட்டு, வீட்டில் இருந்தவர்களை கொடுமையாக தாக்கி இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அதன்பின் முன்னாள் அமைச்சர் சுதர்சனத்தின் வீட்டிலும் 2005ல் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தின் போதும் வீட்டில் இருந்தவர்கள் கொடுமையாக தாக்கப்பட்டனர். தனியாக இருக்கும் வீடுகளை குறி வைத்து பவாரியா கும்பல் தாக்குதல் நடத்தியது. மொத்தம் 24 இடங்களில் அந்த கும்பல் இப்படி திருட்டுகளையும் கொலைகளையும் செய்தது.

கொலை
இதையடுத்து அப்போது வடக்கு மண்ட ஐஜியாக இருந்த ஜாங்கிட் தலைமையிலான குழுதான் பவாரியா கும்பலை பிடித்தது. தமிழ்நாடு முழுக்க சென்று வழக்கு பற்றி விசாரித்து ஆதாரங்களை சேகரித்தனர். லாரி கேங்தான் இந்த குற்றங்களை செய்ததை கண்டுபிடித்தனர். அதன்பின் ராஜஸ்தான், பீகார், உத்தர பிரதேசம், டெல்லி என்று பல மாநிலங்களுக்கு சென்று பவாரியா கும்பலை பிடித்து சிறையில் அடைத்தனர்.

கைது
மொத்தம் இந்த கும்பலில் தலைவன் ஜெயில்தார்சிங்தான் முக்கிய குற்றவாளி. அதை தொடர்ந்து
அவரின் பீனாதேவி, ஓம் பிரகாஷ், அசோக், ராகேஷ், பப்லு, சந்து உள்ளிட்ட குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர் . கைது செய்யப்பட்ட இவர்களில் உடல் நலனை காரணம் காட்டி 2007 ஜெயில்தார்சிங், பீனாதேவி, சந்து, பப்லு ஜாமீன் வாங்கி வெளியே வந்தனர்.

ஜெயில்தார்சிங்
ஆனால் வெளியே வந்த இவர்கள் ஜாமீன் கையெழுத்து போடாமல் அப்படியே தலைமறைவாகிவிட்டனர். இந்த நிலையில் 15 வருடங்களுக்கு பின் சென்னையில் பதுங்கி இருந்த ஜெயில்தார்சிங்கை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். சென்னையில் வாடகை வீடு ஒன்றில் இவர் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் பீனாதேவி, சந்து, பப்லு ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications