எம்ஜிஆர் மாதிரியே விஜய்க்கும் நடக்குது! மக்கள் தூக்கி எறிய போறாங்க.. திமுக மீது ஆதவ் அர்ஜுனா அட்டாக்
சென்னை: தவெக தலைவர் விஜய், வரும் 13ஆம் தேதி திருச்சியில் இருந்து தனது மக்கள் சந்திப்பு பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தரப்பு இதற்காக அனுமதி கேட்ட நிலையில், காவல்துறை அனுமதி மறுத்ததாக தகவல் வெளியான நிலையில், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் 2வது மதுரை மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்ததாக மக்களை சந்திக்கும் வகையில் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். முதலில் விஜய்ய் திருச்சியில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்.

சுற்றுப்பயணம் செல்லும் விஜய்
சுற்றுபயணத்திற்கான வாகனமும் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் வரும் 13 ஆம் தேதி திருச்சி ஸ்ரீரங்கத்தில் முதல் மக்கள் சந்திப்பு சுற்றுபயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் இதற்காக அனுமதி கேட்டு திருச்சி மாநகர காவல்துறையிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் காவல்துறை அனுமதி மறுத்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் தான், தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா திமுக மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதாவது விஜய்யின் சுற்றுப்பயணத்தினை தடுக்கும் விதமாக காவல்துறை செயல்படுவதாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
அன்றைக்கு எம்ஜிஆருக்கு நடந்தது
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., திமுக அராஜக அரசுக்கு எதிராக இயக்கம் கண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவெடுத்தபோது, அதை தங்கள் அதிகாரம் கொண்டு அடக்க நினைத்தது அன்றைய ஆளும் அரசு. அந்த அதிகார சக்திகளின் ஆட்டத்திற்கு, அடுத்த தேர்தலிலேயே முடிவுரை எழுதினார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
இன்று எங்கள் தலைவரும், தமிழக மக்களின் ஒரே நம்பிக்கையுமான தவெக தலைவர் விஜய் அவர்களின் சுற்றுப்பயணத்தை தடுக்கும் நோக்கில் தங்கள் அதிகார பலத்தைக் கொண்டு காவல்துறையின் மூலம் நெருக்கடி கொடுக்க முனைகிறது இன்றைய திமுக அரசு. மக்கள் தலைவராக விஜய் அவர்களுக்கு இருக்கும் பேராதரவை பொறுத்துக்கொள்ள முடியாத அச்சத்தின் வெளிப்பாடாகவே அரசின் இந்த அதிகார அழுத்தத்தை பார்க்க வேண்டியுள்ளது.
அதிகாரத்திற்கு முடிவுரை எழுதுவார்கள்
ஜனநாயக நாட்டில் எந்தத் தலைவரும் மக்களை சந்திப்பதை எப்பேர்ப்பட்ட அதிகார சக்தியாலும் தடுக்க முடியாது. அப்படி தடுக்க நினைத்த அதிகார சக்திகளை மக்களே தூக்கி எறிந்திருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு நமக்கு சொல்லும் பாடம். மக்களே மகத்தான ஆசான்கள்... அவர்களே உங்கள் அதிகாரத்திற்கு முடிவுரை எழுதுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விஜய் தங்க ஹோட்டல் கிடைக்கவில்லை?
திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து விஜய் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்க இருக்கும் நிலையில், அவர் அங்கு தங்குவதற்கு கூட ஹோட்டல் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. பாதுகாப்பு பிரச்சினை மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக விஜய் தங்குவதற்கு ஹோட்டலில் அறை கொடுக்க அதன் உரிமையாளர்கள் முன் வரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக தவெக நிர்வாகிகள் விஜய்யின் சுற்றுப்பயணத் திட்டத்தை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் ஆதவ் அர்ஜுனா திமுகவை கண்டித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications