தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடி மின்னலுடன் ஐந்து நாட்களுக்கு மிக கனமழை - குடை அவசியம் மக்களே
தென்மேற்குப் பருவமழை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில் இன்றும் நாளையும் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிவித்துள்ளார்.
சென்னை: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று தேனி ,திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நீலகிரி ,கோவை, திருநெல்வேலி , கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் தொடங்கி தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் பல அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கோவிலுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. பாலம் ஒன்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரங்களில் தமிழ்நாட்டில் குமரி மாவட்டம் கலியல் பகுதியில் 17 செமீ மழை பதிவாகியுள்ளது. குழித்துறையில் 15 செமீ மழை பதிவாகியுள்ளது. தக்கலை,நாகர்கோவிலில் 12 செமீ மழையும், மயிலாடியில் 11 செமீ மழையும் கொட்டாரத்தில் 9 செமீ மழையும் பதிவாகியுள்ளது. பொன்னமராவதியில் 8 செமீ மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரியில் 6 செமீ மழையும் வால்பாறை, ஏற்காடு, கோவையில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது. பாப்பிரெட்டிபட்டி, ஆயிக்குடி, அருப்புக்கோட்டை, மதுரை, பாபநாசம், திருநெல்வேலியில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் மேன்மேற்குப் பருவக்காற்று காரணமாக இன்று தேனி ,திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வெளுக்க போகுது கனமழை.. இந்த 7 மாவட்ட மக்களுக்குக் குஷி தான்.. வானிலை மையத்தின் சூப்பர் தகவல்
வானிலை மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீலகிரி ,கோவை, திருநெல்வேலி , கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், தென்மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளைய தினம் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், தென்மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
29ஆம் தேதி கடலோர மாவட்டங்கள்,டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை,காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும்.
வருகிற 30ஆம் தேதி உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை26 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.
இன்று குமரிக்கடல்,மன்னார் வளைகுடா ,தென்மேற்கு வங்கக்கடல், ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கேரளா, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.