அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்பு நடக்காது.. நீர்நிலைகளை காப்பது அரசின் கடமை.. ஹைகோர்ட் சுளீர்
சென்னை: நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையை எதிர்த்த வழக்கில், ‛‛ நீர்நிலைகளை பாதுகாப்பது என்பது அரசின் கடமை. அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்புகள் நடக்க வாய்ப்பு இல்லை'' என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் மழைக்காலத்தில் மழைநீர் செல்ல வழியின்றி உள்ளது.
இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது.
நீங்கள் இருப்பதே நீர்நிலை ஆக்கிரமிப்பில்தான்! சென்னை உயர்நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்த சிபிஎம்
ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு
இதனால் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உரிய போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் அயனம்பாக்கத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்றம் வழக்கு விசாரணை
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் விளக்கம் அளிக்க காலஅவகாசம் கோரப்பட்டது. இதற்கிடையே ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடாது என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றம் கருத்து
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் சில கருத்துகளை தெரிவித்தது. ‛‛நிலம் பொதுமக்களுக்கு சொந்தமானது என மனுதாரர்கள் தரப்பில் நிரூபிக்கவில்லை. பொதுமக்கள் மட்டுமின்றி அரசு நிறுவனங்களும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. குடிநீர் ஆதாரம் மட்டுமின்றி சுற்றுச்சூழல் சமநிலையாக வைப்பதிலும் நீர்நிலைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் நீர்நிலை ஆக்கிரமிப்பு என்பது அதனை பாதுகாப்பதில் இருந்து தவறும் செயலாக தான் பார்க்க வேண்டும்'' என நீதிமன்றம் கருத்து கூறியது.
நீர்நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமை
மேலும், நீர்நிலைகளை பாதுகாப்பது என்பது அரசின் கடமையாகும். அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்புகள் நடக்க வாய்ப்பு இல்லை. இயற்கையை பாதுகாத்தால் இயற்கை நம்மை பாதுகாக்கும். இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் புவிவெப்பமயமாதல், சுனாமி போன்ற பேரிடர்கள் மூலம் இயற்கை நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும்'' என நீதிமன்றம் கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தை எதிர்க்கும் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.