அரியர் ஆல்பாஸ் அறிவிப்பில் விதிமீறலும் இல்லை - ஹைகோர்ட்டில் தமிழக அரசு பதில்
சென்னை: பல்கலைக்கழக அரியர் தேர்வில் ஆல்பாஸ் என்னும் அறிவிப்பில் எந்த விதிமீறலும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது. யுஜிசி விதிமுறைகளை மீறி விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை அரியர் தேர்வுகளை ரத்து செய்ய பல்கலைக்கழகங்களுக்கு அதிகாரம் உள்ளது என்றும் அரசின் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட போது, அரியர் தேர்வுகளையும் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த அறிவிப்பு கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரையில் சென்றது. மாணவர்களின் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது விதிமுறைகளுக்கு எதிரானது என யுஜிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரியர் தேர்வை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளுக்கு பதிலளித்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில், அரியர் தேர்வு ரத்து என்பது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணானது எனத் தெரிவித்திருந்தது.
பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில், 'இறுதி பருவத் தேர்வு நடத்தப்பட வேண்டியது அவசியம். இறுதி பருவ மாணவர்களை முந்தைய தேர்வு மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்ச்சியடையச் செய்ய முடியாது. அரியர் தேர்வுகளை ரத்து செய்வதில் தங்களுக்கு உடன்பாடில்லை' எனத் தெரிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து இறுதி பருவத் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தும் போது, அரியர் தேர்வுகளை ஏன் நடத்த முடியாது எனக் கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், விசாரணையை நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், ராம்குமார் ஆதித்தன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவை அரியர்ஸ் மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி பெற்றுவிட்டதாக அறிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், அரியர்ஸ் தேர்வு நடத்தாமல் அரியர் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு இடைக்காலத்தடை விதிக்க வேண்டுமெனவும், ஏற்கனவே வெளியிட்டிருந்தால் அதனை உடனடியாக திரும்பப் பெற்று புதிய அறிவிப்பாணை வெளியிட்டு, அரியர் தேர்வை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நவம்பர் 18ஆம் தேதியன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இவ்வழக்கு தொடர்பாக கூடுதல் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்ததாக குறிப்பிட்டார். அந்த பதில் மனுவில்,அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது. அரியர் தேர்வை ரத்து செய்வது விதிகளுக்கு முரணானது, கல்லூரி மாணவர்களுக்கு இறுதிப்பருவத் தேர்வை நடத்தியே ஆக வேண்டும், முந்தைய தேர்வு மதிப்பீட்டின் அடிப்படையில் இறுதிப்பருவ மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்க முடியாது,' என்று பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து நீதிபதிகள், வழக்கு தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு அவகாசம் வழங்கி வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், அரியர் தேர்ச்சிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்கலைக்கழக அரியர் தேர்வில் ஆல்பாஸ் என்னும் அறிவிப்பில் எந்த விதிமீறலும் இல்லை. யுஜிசி விதிமுறைகளை மீறி விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை அரியர் தேர்வுகளை ரத்து செய்ய பல்கலைக்கழகங்களுக்கு அதிகாரம் உள்ளது. மாணவர்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவில் எந்த விதிமீறலும் இல்லை என உயர்கல்வித்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications