காவல் துறையால் தேடப்படும் எந்த ஒரு குற்றவாளிக்கும் பாஜகவில் இடம் இல்லை- அண்ணாமலை உறுதி
சென்னை: போலீஸ் தேடுகின்ற எந்த ஒரு குற்றவாளிக்கும் பாஜகவில் இடமில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். நீட் தேர்வு மாணவர்கள் யாருக்கும் எதிரானது கிடையாது என்றும் அண்ணாமலை கூறினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி காணொளி வாயிலாக திறந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் '' தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்'' என்று பேசினார். இது குறித்து அண்ணாமலையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

நீட் எதிரானது அல்ல
இதற்கு பதில் அளித்த அவர் '' ஒரு மாநில முதல்வருக்கு, பிரதமரிடம் எதை பற்றி பேசுவதற்கும் உரிமை உள்ளது. அதை தவறு என்று சொல்ல முடியாது. இது அவருடைய கருத்து. ஆனால் நீட் தேர்வு மாணவர்கள் யாருக்கும் எதிரானது கிடையாது. சில தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டுமே நீட் எதிரானது' என்று அண்ணாமலை கூறினார்.

கருத்து சுதந்திரம் எங்கே?
மாநிலங்களின் சட்ட ஒழுங்கு பிரிவை மத்திய அரசுக்கு மாற்ற வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியதை குறிப்பிட்டு நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, ' இது ஹெச்.ராஜாவின் தனிப்பட்ட கருத்து. காவல்துறை எப்போதுமே மாநில அரசிடம்தான் இருக்க வேண்டும். தமிழக காவல்துறை மீது பாஜகவுக்கு எப்போதும் மரியாதை உண்டு. ஆனால் தமிழகத்தில் கருத்து சுதந்திரம் கேள்விக்கு உள்ளாகி வருகிறது. மிகவும் மோசமாக உள்ளது. கருத்துகள் கூறுபவர்கள் மீது காவல்துறை வழக்குகள் பாய்கின்றன என்று கூறினார்.

குற்றவாளிகளுக்கு இடமில்லை
தமிழக அரசின் 21 பொங்கல் பரிசு பொருட்கள் தரம் குறைவாக, எடை குறைவாக உள்ளதது என்று மக்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர் என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டினார். இப்படி பொங்கல் பரிசை குறை கூறும் மக்கள் மீது வழக்குப்பதிவு செய்வது நியாயமா? என்று அவர் கூறினார். இதனை தொடர்ந்து படப்பை குணா பாஜகவில் இணைகிறாரா? என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் கூறிய அண்ணாமலை போலீஸ் தேடுகின்ற எந்த ஒரு குற்றவாளிக்கும் பாஜகவில் இடமில்லை என்று கூறினார்.

படப்பை குணா மனைவியை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன்
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் ரவுடி படப்பை குணாவின் மனைவியை பார்த்ததாக செய்திகள் வருகின்றனவே என்று நிருபர்கள் கேட்டனர். ''இது தொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசப்படும். பொன்.ராதாகிருஷ்ணன் சட்டம் தெரிந்தவர்; மத்திய அமைச்சராக இருந்தவர். அவருடைய நோக்கமும் படப்பை குணாவை கட்சியில் சேர்ப்பதாக இருக்காது. இது கட்சியின் நோக்கமும் கிடையாது'' என்று அண்ணாமலை கூறினார்.

கோவில்கள் இடிக்கப்படுவது குறித்து...
ஆக்கிரமிப்பு கோவில்கள் இடிக்கப்படுவது குறித்து எழுப்பபட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், ' கோவில்கள் யாருடைய தனிப்பட்ட சொத்தும் கிடையாது. ஆக்கிரமிப்பு செய்த கோவில்களை இடிக்க அரசுக்கு முழு உரிமை உள்ளது. அரசின் கடமைக்கு யாரும் குறுக்கே நிற்கவில்லை. ஆனால் அரசு அவர்களுக்கும் போதிய நேரம் கொடுத்து இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். அரசு அவசரம், அவசரமாக கோவில்களை இடிக்க கூடாது.

மன்னிக்க முடியாத குற்றம்
பஞ்சாப்பில் பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி பற்றி பேசிய அண்ணாமலை, '' பிரதமருக்கு பிரச்சினை ஏற்பட்டபோது பஞ்சாப் முதல்வர் சம்பவ இடத்துக்கு செல்லவில்லை., அதற்கு அவர் சொல்லும் காரணத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது. முதல்வர் போகவில்லை என்றால் மாநில தலைமை செயலாளர், டிஜிபி ஏன் செல்லவில்லை? பஞ்சாப் முதல்வர் இவர்களை செல்ல வேண்டாம் என்று உத்தரவிட்டாரா? என்ற கேள்வி நமக்கு எழுகிறது. பஞ்சாப் அரசு செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்று அண்ணாமலை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications