ஆர்எஸ்எஸ் சிறுமை நிறைந்த இயக்கம்.. இந்தியாவில் எந்த பெருமையும் இல்லை.. கே.எஸ்.அழகிரி விமர்சனம்
சென்னை: இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்.க்கு எந்த பெருமையும் இல்லை என்றும், அது சிறுமை நிறைந்த இயக்கம் எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவிடத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில், காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது கே.எஸ் அழகிரி கூறியதாவது: பெருந்தலைவர் காமராஜர், காந்தியத்தின் உண்மையான வாரிசு. நாடாளுமன்ற படிக்கட்டுகளில் அவர் நடந்து சென்றபோது இந்திய ஜனநாயகமே வெற்றி பெற்றதற்கான ஆதாரமாக அமைந்தது. அவர் சமூகத்தில் கடை கோடியில் இருக்கின்ற மனிதன். தன்னுடைய உழைப்பால், தியாகத்தால் தன்னையும் வளர்த்துக் கொண்டு, இந்த தேசத்தின் வளர்ச்சிக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் காமராஜர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக 9 ஆண்டுகளாகவும், 2 பிரதமர்களை உருவாக்கக்கூடிய ஆற்றல் படைத்தவராக ஒரு வேட்டி கட்டிய தமிழர் இருந்தார் என்று சொன்னால், அது தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்திருக்கின்ற மதிப்பு. வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மனிதர் காமராஜர். சமூக நீதிக்கு இலக்கணமாக இருந்தவர் காமராஜர். இட ஒதுக்கீடு தந்தையாகவும் காமராஜர் திகழ்கிறார்.
ஆர்எஸ்எஸ் 100 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது என்றும், நேருவே அழிக்க நினைத்தும் அழிக்க முடியவில்லை என்று கூறிய எல்.முருகனின் கருத்துக்கு பதிலளித்த கே.எஸ் அழகிரி, வரலாறு தெரியாதவர்கள் பேசும் பேச்சுதான் எல்.முருகன் பேசியது. ஆர்.எஸ்.எஸ்.க்கு எந்த பெருமையும் இல்லை. அது சிறுமை நிறைந்த இயக்கம். தேசத்தின் விடுதலையில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதாவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சியை தொடர வேண்டும் என்று கூறியவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ்.கார்கள்.
ஐஏஎஸ் அதிகாரியை, கே.எஸ்.அழகிரி உறவினர்கள் மிரட்டுவது போல் ஊடகங்களில் செய்திகள் வருவது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கே.எஸ். அழகிரி, யாரு தவறு செய்தாலும் தண்டனை கிடைக்கும் என கூறினார்.
“அப்டேட்” ஆன ஆர்எஸ்எஸ்.. டவுசருக்கு பதில் “காக்கி பேண்ட்” - புதுச்சேரி அணிவகுப்பில் பாஜக அமைச்சர்கள்