‛அந்த’ கருவி எங்கே? ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம் இதுதான்! மத்திய அமைச்சரை அருகே வைத்து சாடிய மம்தா
சென்னை: ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 280 பேர் இறந்துள்ள நிலையில் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் விபத்தில் சிக்கிய ரயிலில் மோதலை தடுக்கும் கருவி இல்லை. இந்த கருவி இருந்திருந்தால் விபத்து நடந்து இருக்காது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை அருகே வைத்து சாடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி நேற்று கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் நேற்று இரவு தடம்புரண்டது. அதன்பிறகு அந்த வழியாக வந்த பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயில் தடம்புரண்ட கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதையடுத்து சரக்கு ரயில் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

இப்படியாக அடுத்தடுத்து 3 ரயில்கள் விபத்தில் சிக்கின. இந்தியாவில் ரயில்கள் அவ்வப்போது தடம் புரளும் நிலையில் 3 ரயில்கள் அடுத்தடுத்து இப்படி விபத்தில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் தற்போது வரை தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உள்பட 280 பேர் வரை பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் தான் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது மம்தா பானர்ஜி கூறியதாவது: இந்தியாவின் சிறந்த ரயிலில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒன்றாகும். நான் 3 முறை ரயில்வே அமைச்சராக இருந்திருக்கிறேன். நான் பார்த்ததில் 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய ரயில் விபத்தாக இது உள்ளது.
இதுபற்றி ரயில்வே பாதுகாப்பு கமிஷன் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விபத்து நடந்த ரயிலில் Anti Collision Device என்பது இல்லை. இது இருந்திருந்தால் இத்தகைய விபத்து நடந்து இருக்காது. தற்போது இறந்தவர்களின் உயிரை நம்மால் திரும்ப கொண்டு வர முடியாது. ஆனால் மீட்பு பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகளை நாம் செய்ய வேண்டும்.

நாங்கள் நேற்று 40 ஆம்புலன்களையும், இன்று 70 ஆம்புலன்களையும் அனுப்பி வைத்தோம். 40 டாக்டர்கள் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்'' என்றார். இதற்கிடையே ரயில்வே விபத்தில் இறந்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாகவும், படுகாயமடைந்தவருக்கு ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications