திருவள்ளுவருக்கு விபூதி பூசினால் கைது செய்வீர்களா.. பாஜக ஏற்காது.. முரளிதரராவ் அதிரடி பேட்டி
சென்னை: திருவள்ளுவரை திருநீறுடன் பார்ப்பதற்காக மக்களை கைது செய்ய வேண்டும் என்று, திமுக, விரும்பினால் அதை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று, தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ் தெரிவித்தார்.
சென்னையில் இன்று பாஜக மாவட்டத் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம், தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திருவள்ளுவர் கடவுளை நம்பாத நாத்திகர் கிடையாது. அவர் கடவுளை வணங்கிய ஆத்திகவாதி. இதற்கு அவரது திருக்குறள்களே சான்று.
இப்போது திமுகவின் கொள்கை மற்றும் திருக்குறள் ஆகியவற்றுக்கு நடுவேதான் மோதல் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளுவரை, விபூதி அணிந்தவராக பார்ப்பதற்காக கைது செய்ய முடியாது. திருவள்ளுவர் ஆத்திகர் என்பதை நிரூபிக்கும் வகையிலான புகைப்படங்கள், கோவில்களில் எடுக்கப்பட்ட படங்கள், என ஆதாரங்கள் பல உள்ளது.
ரஜினி அரசியலுக்கு வரட்டும்.. ஆனால் இப்படி பார்க்கத்தான் எல்லோருக்கும் ஆசை.. அமீர்
திருவள்ளுவரை விபூதியுடன் பார்ப்பதற்காக மக்களை கைது செய்ய வேண்டும் என்று, திமுக, விரும்பினால் அதை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். பாஜகவும் ஏற்காது. விபூதி பூசிய திருவள்ளுவர் புகைப்படத்தை வைத்து உள்ள ஒவ்வொருவரையும் கைது செய்ய முடியுமா? அப்படி திமுக விரும்பினால் அதை எதிர்த்து பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்.
திருவள்ளுவர், திமுகவுக்கு மட்டும் சொந்தமானவர் கிடையாது. ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் சொந்தமானவர். பாஜக உலகளாவிய தத்துவத்தின் அடிப்படையில் இந்த விஷயத்தை அணுகுகிறது. திருவள்ளுவர் விஷயமாக விவாதிப்பதற்கு பாஜக தயாராக உள்ளது. எந்த ஒரு மூலையில் விவாதம் நடந்தாலும் பாஜக அதில் பங்கேற்கும். இவ்வாறு முரளிதர ராவ் தெரிவித்தார்.