திமுகவில் குறைந்த எண்ணிக்கை தொகுதியால் வலி இருக்கிறது! ஆனாலும் 234-லிலும்...! திருமாவளவன் வேதனை
சென்னை: திமுக கூட்டணியில் குறைந்த எண்ணிக்கையிலான தொகுதியே ஒதுக்கப்படுவதால் வலி இருப்பதாக விசிக தலைவர் தொல் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் 2026 தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ளது. இந்த நிலையில் திமுக 23 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. திமுகவில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, மமக, ஐயூஎம்எல், கொமதேக உள்ளிட்ட கட்சிகளுக்கு 43 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மார்க்சிஸ்ட் கட்சிக்கும் 5 தொகுதிகள் ஒதுக்க திமுக முன் வந்துள்ளது. ஆனால் 6 தொகுதிகளை கேட்பதால் இழுபறி நீடிக்கிறது. தேமுதிகவுடன் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. அது போல் விசிகவுடன் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் விசிகவின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தங்களுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கவும் வரும் 2028ஆம் ஆண்டு நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் விசிகவுக்கு ஒரு சீட் ஒதுக்கக் கோரியும் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
விசிக எப்போதும் முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமான கட்சி. திருமாவளவன் கொள்கை பிடிப்புள்ளவர், அவரது கட்சியின் வளர்ச்சி அபரிமிதமானது என்றெல்லாம் அவருக்கு தெரியும். ஆயினும் அதிக கட்சிகள் கூட்டணியில் இருப்பதால் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க முடியாத நிலையில் திமுக உள்ளது.
இதனால் குறைந்த தொகுதிகளையே பெறும் நிலை இருக்கிறது. இந்த நிலை ஏன் என்பது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தொண்டர்களுக்கு விளக்கி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் "இன்று முதல் வரும் 24 ஆம் தேதி வரை விருப்பமனுக்களை சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் பெறலாம்.
மிகக் குறைவான எண்ணிக்கையிலான தொகுதிகளையே பெற்று கூட்டணியில் போட்டியிடுகிறோம். இருந்தாலும் 234 தொகுதியிலிருந்தும் விருப்பமனுக்களை பெறுகிறோம். இது, மெகா கூட்டணி. 23 கட்சிகள் இணைந்துள்ள கூட்டணி, ஆகவே குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிடக் கூடிய நிலையே உள்ளது.
இருந்தாலும் ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் எவ்வளவு தொகுதியில் இருந்தும் எவ்வளவு பேர் போட்டியிட விரும்புகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளவே விருப்பமனு பெறப்படுகிறது.
இது ஒரு ஜனநாயக நடைமுறையாகவே விசிக கடைப்பிடித்து வருகிறது. விருப்பமனுக்கள் பெறப்பட்டாலும் அதன் பிறகு நேர்காணல் நடத்தப்படாது. கட்சித் தலைவர் என்ற முறையில் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பேன்.
கூட்டணியில் குறைந்த தொகுதி என்றாலும் பெருந்தன்மையாக இருக்கிறோம். இது அரசியல் உறுப்பாட்டை மேலும் உறுதியாக்கும். நாகரீகமான அரசியல் மரபை கடைபிடித்து வருகிறோம்.
25 ஆண்டு ஆனாலும் களம் புதிதாக உள்ளது. திமுக கூட்டணியில் விசிகவுக்கு அதிக தொகுதிகள் கிடைக்க வேண்டும் என பொதுவெளியிலும் சமூகவெளியிலும் கோரிக்கைகள் எழுந்தன. அதை நாங்களும் வெளிப்படுத்தியிருந்தோம். ஆனால் மெகா கூட்டணியில் அங்கம் வகித்ததால் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. குறைந்த தொகுதி கிடைக்கிறதே என்ற வலி இருந்தாலும், வலிமை இருந்தால்தான் வலது சாரிகளையும் பிற்போக்கு சக்திகளையும் வீழ்த்த முடியும் என்ற புரிதல் இருக்கிறது. இதனால் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை சுமுகமாக செல்கிறது. இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications