“சனாதனம் ஒழிய ஓபிசி மக்கள் இதை செய்ய வேண்டும்..” சென்னை மாநாட்டில் திருமாவளவன் எம்பி பேச்சு
சென்னை: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி பேசியது பேசுபொருளாகியுள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, சிபிஐ மற்றும் சிபிஎம் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் சிறப்புரையாற்றிய உதயநிதி ஸ்டாலின்,

"சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. நிலையானதாகவும், மாற்ற முடியாததாகவும் இருப்பதன் அர்த்தமே சனாதனம். ஆனால், எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது, அனைத்தையும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கு உருவான இயக்கம்தான் கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும். சனாதனம் என்பது மலேரியா, டெங்கு போன்றது. அதை எதிர்ப்பது அல்ல, ஒழிக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்" என்று பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த மாநாட்டில் திருமாவளவன் பேசியதும் விவாதமாக மாறியுள்ளது. அதாவது, "கடந்த 1950ம் ஆண்டு குடியரசுத் தலைவரிடம் அரசியலமைப்பு சட்டம் ஒப்படைக்கப்பட்டபோது, அதே ஆண்டில் ஜனவரி 26ம் தேதியன்று இந்தியா தன்னை குடியரசு நாடாக அறிவித்துக்கொண்டது. ஆனால் அப்போது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்று ஒரேயொரு குரல் ஒலித்தது, அதுதான் ஆர்எஸ்எஸ்-ன் குரல், சங்பரிவாரின் குரல்.
இந்த அரசியலமைப்பு சட்டம்தான் சமூக நீதியை தருகிறது, சுதந்திரத்தை தருகிறது, சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் பேசுகிறது. ஆக இந்த நான்கையும் மறுப்பதுதான் சனாதனம். எனவேதான் அவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை ஏற்கவில்லை. சனாதன தர்மம், இந்து தர்மம், மனு தர்மம் பிராமணர்களுக்கானது, அவர்களே உச்சநீதிமன்றத்தில் அதிகாரத்தில் இருக்கிறார்கள். மட்டுமல்லாது உயர்கல்வி நிறுவனம், ஆட்சி அதிகாரம் ஆகியவற்றில் அதிகாரத்தில் இருந்து கோலோச்சுகிறார்கள்.
அப்படிப்பட்ட நிலையில் ஓபிசி என்று அழைக்கப்பட்ட பிரிவினர் பிராமணர்கள் மீதுதானே ஆத்திரப்பட வேண்டும், அவர்கள் மீதுதானே பொறாமைப்பட வேண்டும்? அவர்களைதானே எதிரியாக பார்க்க வேண்டும்? ஆனால் இந்திய சமூக கட்டமைப்பில், இந்து சமூக கட்டமைப்பில் அப்படியே தலைகீழாக இருக்கிறது. ஓபிசி சமூகத்தினர் இந்த மண்ணின் பூர்வ குடிகளை, இந்த மண்ணின் உழைப்பாளர்களை இவர்கள் எதிரிகளாக பார்க்கும் உளவியல் இங்கு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
இது அப்படியே தலைகீழ் மாற்றம் ஆக வேண்டும். அதாவது ஓபிசி பிரிவினர், பிரமண ஆதித்கத்தை எதிர்த்த நகர வேண்டும். அப்போதுதான் சனாதன ஒழிப்பு சாத்தியமாகும். ஓபிசி ஆரிய எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பை நோக்கி திரும்புகிறபோதுதான் இது சாத்தியமாகும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications