தனித்துவிடப்படும் பாஜக.. 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி எப்படி அமையும்? திருமாவளவன் பரபர பேச்சு
சென்னை: இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் தான் பாஜகவுக்கு எதிர்ப்பு அதிகமாக உள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக தனித்து விடப்படும் என திருமாவளவன் ஆரூடம் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள தனியார் சட்டக்கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு படித்து வரும் தமிழக மாணவர்கள் சுமார் 50 பேர் தேர்வு எழுதிவிட்டு கார்களில் தமிழகம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
ஆந்திரா - தமிழ்நாடு எல்லையில் வடமாலைப்பேட்டை என்ற இடத்தில் உள்ள சுங்கச்சாவடியில் பிரச்சனை ஏற்பட்டது. சுங்கச்சாவடி ஊழியர்களும், பொதுமக்களும் ஒன்று சேர்ந்து மாணவர்கள் வந்த கார் ஒன்றை அடித்து நொறுக்கினர். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

திருமாவளவன் பேட்டி
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் சுங்கச்சாவடியில் தாக்கப்பட்ட தமிழக சட்டக்கல்லூரி மாணவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனை சென்னையில் இன்று சந்தித்தனர். நடந்த விஷயத்தை திருமாவளவன் கேட்டறிந்தார். அதன்பிறகு சென்னையில் திருமாவளவன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அதிர்ச்சியளிக்கிறது
ஆந்திரா எல்லையோரம் சட்டக்கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுதி தமிழ்நாடு திரும்பும்போது சுங்கச்சாவடியில் வைத்து தாக்கப்பட்டுள்ளனர். அடிக்கடி அந்த சுங்கச்சாவடியில் இதுபோன்ற வன்முறைகள் நடப்பதாக தெரியவருகிறது. கட்டணம் செலுத்துவதில் தவறு செய்திருந்தால் கைது செய்து இருக்கலாம். வழக்குப்பதிவு செய்து இருக்கலாம். 100க்கும் மேற்பட்டவர்கள் ஆயுதங்களுடன் வந்து மாணவர்களை தாக்கி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

வழக்கு தள்ளுபடி
இருமாநில காவல்துறையினரும் கலந்து பேசி எதிர்காலத்தில் இத்தகைய வன்முறைகள் நிகழாத வகையில் தடுப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும். தமிழக மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தால் அதனை தள்ளுபடி செய்ய வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட சமூக விரோத சக்தி மீது ஆந்திர காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

வெறுப்பு அரசியலால் கோவை சம்பவம்
இதையடுத்து கோவையில் காரில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் இறந்தது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு திருமாவளவன் பதிலளித்தார். அப்போது, அவர் கூறியதாவது: கோவையில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை தருகிறது. மத அடிப்படையிலான வன்முறைகள் நிகழாமல் கடந்த 10 ஆண்டுகளாக அமைதியை நிலைநாட்டும் வகையில் தமிழகம் விளங்கியது. ஆனால் சங்பரிவார்களின் நடவடிக்கைகளால் இன்றைக்கு வெறுப்பு அரசியல் கோலோச்சுகிறது. அதன் வெளிப்பாடாக தான் இதனை பார்க்க வேண்டி உள்ளது.

வன்முறை களமாக மாற்ற
வெடிகுண்டு புழக்கம் அதிகரிக்கிறது என்பதற்கு சான்றாக கோவை நிகழ்வு உள்ளது. சிலிண்டர் என்ற நிலையில் வெடிகுண்டாக இருக்கும் என்ற ஐயத்தை எழுப்பி இருக்கிறார்கள். தமிழக அரசு விழிப்பாக இருக்க வேண்டும். தமிழகத்தை வன்முறை களமாக மாற்ற சங்பரிவார் கும்பல் திட்டமிட்டு செயல்படுகிறது. சங்பரிவார்களை கண்காணிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீண்டும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிர்ப்பு
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ்க்கும் எதிரான செயல்பாடுகள் தமிழ்நாட்டில் தான் வலுப்பெற்றுள்ளன. சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தபோது 80க்கும் அதிகமான அமைப்புகள் ஓரணியில் திரண்டன. 24 அரசியல் கட்சிகள் சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போராட்டத்தில் பங்கேற்றன.

பாஜக தனிமைப்படுத்தப்படும்
இதனால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் நிகழ்கிறதோ இல்லையோ தமிழ்நாட்டில் பாஜக தனிமைப்படுத்தப்படும். அதற்கு ஏதுவான சூழல் தான் இங்கு நிலவுகிறது. இந்நிலையில் தான் தமிழகத்தில் காங்கிரஸ், திமுக இல்லாத கூட்டணி அமைக்கலாம் என பாஜக கனவு காண்கிறது. தமிழகத்தில் பாஜக-ஆர்எஸ்எஸ் இல்லாத ஒரு கூட்டணி உருவாகுமே தவிர, பாஜக தலைமையில் ஒரு அணி, பெரிய அணி தேர்தல் கூட்டணியாக உருவாக வாய்ப்பே இல்லை. தேசிய அளவில் பாஜகவை தனிமைப்படுத்துவதே தேசநலன்களுக்கு பாதுகாப்பாகவும், பயன் அளிப்பதாகவும் இருக்கும். இத்தகைய சூழலில் பாஜக தமிழ்நாட்டில் அனைத்து கட்சியையும் இணைத்து கூட்டணி அமைப்போம் என கூறுவது வேடிக்கையாக உள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications