ஆளுங்கட்சி அடாவடி.. தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து பாஜக ஓரவஞ்சனை - கொந்தளித்த திருமாவளவன்
சென்னை: நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஆளும் கட்சியினர் மிகவும் அடவடித் தனமாக நடந்து கொள்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவரையே பேச அனுமதிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் பேசுவதற்கான சூழல் அமைந்தால் தமிழ்நாட்டுக்காக நிதி ஒதுக்காத நிலை குறித்து தமிழ்நாட்டு உறுப்பினர்களின் தரப்பில் இருந்து கேள்வி, உரிமைக் குரல் எழுப்புவோம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த விடுதலைச் சிறுத்தை கட்சிகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளதாவது: இந்த கூட்டத்தொடரில் ஆளும் கட்சியினர் மிகவும் அடாவடித் தனமாக நடந்து கொண்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவரையே பேச அனுமதிக்கவில்லை. நூல்களில் இருந்தும் இதழ்களில் இருந்தும் மேற்கோள் காட்டிப் பேசுவது இயல்பான ஒன்றுதான்.

தமிழ்நாட்டிற்கான நிதி
ஆனால், ராகுல் காந்தி பேசும்போது வெளியிடப்படாத ஒரு நூலிலிருந்து பேசக்கூடாது என்கிற ஒரு காரணத்தைக் காட்டி அவரை முற்றாக பேச விடாமல் தடுத்து நிறுத்தி, அதன் மூலம் கூட்டத் தொடரையே கடந்த வாரம் நடத்தவில்லை. இந்த வாரமும் அப்படித்தான் இருக்கும் என்று கருதுகிறோம். பேசுவதற்கான சூழல் அமைந்தால் தமிழ்நாட்டுக்காக நிதி ஒதுக்காத நிலை குறித்து தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரப்பில் இருந்து கேள்வி, உரிமைக் குரல் எழுப்புவோம்.
பாஜகவின் ஓரவஞ்சனை
நமக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிதியையே கல்வி உள்ளிட்ட பல தொகையை அவர்கள் ஒதுக்கவில்லை. ஒவ்வொரு பட்ஜெட்டின்போதும் மாநிலம் வாரியாக கணிசமான ஒதுக்கீடு செய்கிறபோது தமிழ்நாட்டுக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை காட்டுகின்றனர். பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளுகிற மாநிலங்களை வஞ்சிக்கும் வகையில் திட்டமிட்டே நிதி ஒதுக்கீடு செய்யாமல் அதைப் புறக்கணித்து வருகின்றனர்.
தமிழ்நாடும் அதில் ஒன்று. தமிழ்நாடு மட்டுமல்லாமல் மேற்குவங்கம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இதே ஓரவஞ்சனையான அணுகுமுறையைத் தான் பாஜக அரசு கையாண்டு வருகிறது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications