விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்!
சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் திடீரென மாநில அரசியலுக்கு திரும்பி இருப்பதற்கு பின்னணியில் 2 காரணங்கள் அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. விஜய்யால் விசிகவின் வாக்குகள் பறிபோவதை தடுக்கவும், கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு அமைந்தால், அதனை பயன்படுத்தி கொள்ளவும் திருமாவளவன் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
விசிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நேரத்தில் இருந்தே, திருமாவளவன் முடிவு மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் டெல்லி அரசியலில் இருந்து விலகி, மாநில அரசியல் பக்கம் வருவதை திருமாவளவன் உறுதி செய்திருக்கிறார்.

ஏற்கனவே 2016 சட்டசபைத் தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் தோல்வி அடைந்தார். இந்த முறை திமுக கூட்டணி பலத்துடன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் களமிறங்குவதால், அந்த தொகுதியில் விசிகவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி என்று பார்க்கப்படுகிறது.
திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் வேறு சில நோக்கங்களும் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் விஜய் வடமாவட்டங்களில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று தெரிகிறது. குறிப்பாக விசிகவின் வாக்குகளில் விஜய் சேதாரத்தை உருவாக்குவார் என்று பலரும் கூறுகின்றனர். மாநிலக் கட்சி அந்தஸ்தை எட்டிப்பிடித்துள்ள விசிக, அதனை தக்க வைக்க போராடி வருகிறது.
இப்படியான சூழலில் விஜய்யின் வருகையால் விசிகவுக்கு எந்த பின்னடைவும் தேர்தல் அரசியலில் வந்துவிடக் கூடாது என்பதில் திருமாவளவன் திட்டமிட்டு காய் நகர்த்துகிறார். இதன் காரணமாகவே விசிகவுக்கு சாதகமான தொகுதிகளை பெற்றுள்ளதோடு, திருமாவளவனும் கோதாவில் இறங்கி இருக்கிறார். இதனால் விசிகவினர் கூடுதல் உற்சாகத்துடன் பணியாற்றுவார்கள் என்று தெரிகிறது.
அதேபோல் விசிக நிர்வாகிகள் போட்டியிடும் தொகுதிகளில் ஏதாவது சுணக்கம் ஏற்பட்டால், உடனடியாக திமுக தலைமையிடம் கொண்டு செல்லவும் திருமாவளவன் ஆலோசித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் மே 4ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், அதனை விசிக தலைவர் திருமாவளவன் தங்களுக்கு சாதகமாக்கி கொள்ள திட்டமிடுவதாக தெரிகிறது.
ஏனென்றால் விசிக இதுவரை எந்த கூட்டணி ஆட்சியிலும் பங்கு பெற்றதில்லை. தேர்தலுக்கு பின் திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், அமைச்சரவையில் இடம்பெற விசிக திட்டமிடுவதாக தெரிகிறது. அதற்காகவே திருமாவளவன் மாநில அரசியல் பக்கம் வந்திருக்கிறார் என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications