2 சீட்டுக்காக திமுகவுக்கு ஆதரவா? விமர்சனங்களுக்கு திருமாவளவன் சொன்ன பதில்!
சென்னை: திமுகவின் கூட்டணியில் உள்ள கட்சிகள் மீது, சீட்டுகளுக்காக திமுகவுடன் கட்சிகள் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை அடுக்கி வருகின்றன. இந்நிலையில், திருமாவளவன் இந்த விமர்சனங்களுக்கு இன்று பதிலளித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த திருமாவளவன், அதிமுக அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார். "அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை, அதனுடைய தலைவர்களும் சுதந்திரமாக இயங்க முடியவில்லை. அதிமுக மீது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த காழ்ப்புணர்வும் இல்லை. எந்த உள்நோக்கத்தோடும் இந்த கருத்தை நான் தெரிவிக்கவில்லை. அதிமுகவிலேயே ஒரு குழப்பம் நிலவுகிறது என்றால் அதற்கு முழுக்க முழுக்க பாரதிய ஜனதா கட்சிதான் காரணம்.

சசிகலா அம்மையார் செயல்படாமல் போனதற்கு யார் காரணம்? ஓபிஎஸ் தனிமைப்பட்டு நிற்பதற்கு யார் காரணம்? டிடிவி தினகரன் தனி கட்சி தொடங்கி இயங்குவதற்கு யார் காரணம்? செங்கோட்டையனை அதிமுக தலைமைக்கு எதிராக பேசும் அளவிற்கு உருவாக்கியது யார்? இந்த கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில்தான் அது பாஜகதான்.
பாஜகவின் தலையீடுகளால்தான் அதிமுக இந்த நிலையை எட்டி இருக்கிறது. இதை முன்னணி தலைவர்கள் புரிந்து கொண்டால் அவர்கள் முன்னெச்சரிக்கையான சில முடிவுகளை எடுக்க முடியும். அதிமுகவையும் அவர்களால் காப்பாற்ற முடியும் என்று நான் நம்புகிறேன். பாரதிய ஜனதாவின் கலாச்சாரமே தன்னோடு இணைந்து இயங்குகிற கூட்டணி கட்சிகளை கபளீகரம் செய்வதுதான். இது நல்லெண்ணத்தின் அடிப்படையில் நான் சொல்லுகிற ஒரு கருத்து. வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது.
தமிழ்நாட்டு அரசியலில் திராவிட இயக்கத்தை பலவீனப்படுத்திவிட்டால் அவர்கள் எதிர்பார்க்கிற அளவுக்கு பாரதிய ஜனதாவை இங்கே வளர்த்து விட முடியும் என நம்புகிறார்கள். இந்த சூழ்ச்சியை புரிந்து கொண்டு அதிமுக முன்னணி தலைவர்கள் செயல்படுவது நல்லது" என்று கூறியிருக்கிறார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அவர், "நான் பெரியாரை படித்திருக்கிறேன் என்பதால் என்னை சாதி தலைவர் என்கிறார்கள். பெரியாரை பயின்றவன் என்பதால் நான் திமுகவை ஆதரிக்கிறேன். திமுகவுடன் 2 சீட்டுக்காக நான் இருக்கிறேன் என்று சொல்பவர்களால், அந்த சீட்டை கூட வாங்க முடியவில்லை" என்று பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications