கட்சியில் தனி ராஜாங்கம் நடத்தும் அரசர்... டெல்லி நடத்திய விசாரணை.. முடிவுக்கு வராத கோஷ்டிகானம்..!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான திருநாவுக்கரசர் மாநில தலைமை மீது மன வருத்தத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக தான் மத்திய அரசுக்கு எதிரான கருப்புக் கொடி ஆர்ப்பட்டத்தில் கலந்துகொள்ள சத்தியமூர்த்தி பவனுக்கு வராமல், தனது இல்லம் முன்பாகவே தனிப் போராட்டம் அவர் நடத்திக்கொண்டாராம்.
அரசரின் செயல்பாடுகள் தொடர்பாக வந்த புகாரை அடுத்து டெல்லி தரப்பும் அழைத்து பேசியிருக்கிறது. ஆனாலும் கோஷ்டிகானம் அங்கு தீர்ந்தபாடில்லை.

திருநாவுக்கரசர்
1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மூலம் அரசியலில் அடையாளம் காட்டப்பட்டவர் திருநாவுக்கரசர். வழக்கறிஞர் படிப்பை முடித்து பிராக்டீஸ் செய்து கொண்டிருந்த இவரை அறந்தாங்கி தொகுதியில் அண்ணா திமுக வேட்பாளராக நிறுத்தினார் எம்.ஜி.ஆர். பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருநாவுக்கரசருக்கு 27 வயதில் துணை சபாநாயகர் பதவி தேடி வந்தது.

ஏற்ற இறக்கம்
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பை எம்.ஜி.ஆர். ஏற்படுத்திக் கொடுத்தார். எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அமைச்சராக இருந்த இவர், பிறகு தனி இயக்கம் தொடங்கி தோல்வி கண்டு பாஜகவில் இணைந்தார். அங்கு ராஜ்யசபா உறுப்பினராக தேர்வானதுடன் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். அரசியலில் அனைத்து ஏற்ற இறக்கங்களையும் சந்தித்தவர். கடைசியாக காங்கிரஸில் கட்சியில் இணைந்த இவர், அக்கட்சியின் தமிழக தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார்.

சகல பதவிகள்
அரசியலில் இப்படி சகல பதவிகளையும் அனுபவித்த திருநாவுக்கரசர் தனது மகன் ராமச்சந்திரனையும் தன்னை போல் பெயர் பெற வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன், சட்டப்பேரவை குழுக்களில் ஒன்றில் கூடம் இடம்பெறாதது அவரது தந்தைக்கு வருத்தத்தை தந்துள்ளது. இதற்கு பின்னணியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமை இருக்குமோ என சந்தேகிக்கும் அவர் கடந்த சில வாரங்களாகவே அப்செட்டாக காணப்படுகிறார்.

தனியாக போராட்டம்
மத்திய அரசுக்கு எதிரான கருப்புக்கொடி போராட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் என்றும் அதில் தமிழக காங்கிரஸின் முன்னணித் தலைவர்கள், நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என பலரும் கலந்துகொள்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சத்தியமூர்த்திபவன் செல்வதை தவிர்த்து அண்ணாநகரில் உள்ள தனது இல்லத்தின் முன்பாக ஆதரவாளர்கள் சகிதம் தனியாக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளார் அரசர்.

டெல்லி விசாரணை
இது மட்டுமல்லாமல் கட்சி செயல்பாடுகளிலும் பெரிதாக இவர் ஆர்வம் காட்டாததை தொடர்ந்து டெல்லியிலிருந்து அழைத்து கேட்கப்பட்டிருக்கிறது. அப்போது மனம் திறந்து பேசிய அரசர், இங்குள்ள சில குறைகளை பதிலுக்கு புகாராக தெரிவித்திருக்கிறார். காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை காங்கிரஸில் கோஷ்டிக்கானத்துக்கு மட்டும் பஞ்சமிருக்காது என்பது இது போன்ற நிகழ்வுகள் மூலம் தெரிய வருகிறது.












Click it and Unblock the Notifications