செல்வப்பெருந்தகை எப்படிப்பட்ட ஆள் தெரியுமா? மேடையில் போட்டுடைத்த திருநாவுக்கரசர்!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை பொறுத்தவரை முன் கோபமும் இல்லாதவர், பின் கோபமும் இல்லாதவர் என திருநாவுக்கரசர் எம்.பி. பேசியிருக்கிறார்.
அரசியல் தலைவர்களில் சிலர் முன் கோபப்படுவார்கள் ஆனால் சிறிது நேரத்தில் அதை மறந்துவிடுவார்கள், சிலர் பின் கோபப்படுவார்கள் அவர்கள் மனதில் வைத்திருந்து பழிவாங்குவார்கள் என்று கூறிய திருநாவுக்கரசர், செல்வப்பெருந்தகையை பொறுத்தவரை இந்த இரண்டு குணங்களுமே இல்லாதவர் என புகழாரம் சூட்டினார். சிரித்துக்கொண்டே இருக்கக் கூடியவர், முற்போக்கு சிந்தனையாளர் என திருநாவுக்கரசர் ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளினார்.

செல்வப்பெருந்தகைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி வழங்கப்பட்டதற்காக தாமோ, தங்கபாலோ, கிருஷ்ணசாமியோ எந்த வருத்தமும் படவில்லை என்றும் இது ஒரு டேர்ம் அவ்வளவு தான் எனவும் திருநாவுகரசர் பேசினார். கோஷ்டிப்பூசல் இல்லாத கட்சியே தமிழ்நாட்டில் கிடையாது என்றும் கடுகளவு கட்சியில் கூட கோஷ்டிப்பூசல் இருக்கும் போது காங்கிரஸ் கட்சியில் எப்படி அது இல்லாமல் இருக்கும் என ஓபன் மேடையிலேயே ஒப்புக்கொண்டார்.
அதேபோல் கே.எஸ்.அழகிரி நிதானமானவர், பொறுமையானவர் என்று கூறிய திருநாவுக்கரசர் அவரது காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள், கிடைத்திருப்பதாக சுட்டிக்காட்டினார். இதனால் கே.எஸ்.அழகிரி அதிர்ஷ்டக்காரர் என்றும் அதனால் தான் 5 ஆண்டு காலத்திற்கும் மேலாக அவரால் இந்தப் பதவியில் இருக்க முடிந்தது எனவும் பேசினார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்றுள்ள செல்வப்பெருந்தகை எல்லோரையும் அணுசரித்துச் செல்ல வேண்டும் எனவும் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு தன்னை பொதுவான தலைவராக நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தாம் காங்கிரஸில் இணைந்த போது ஒரு நாள் தனது வீட்டிற்கு வந்து செல்வப்பெருந்தகை தன்னை சந்தித்ததாகவும் அப்போது, நானும் காங்கிரஸில் இணையப் போகிறேன் என தன்னிடம் அவர் கூறிவிட்டுச் சென்றதாகவும் பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக அறிவிக்கப்பட்ட செல்வப்பெருந்தகை முறைப்படி நேற்று மாலை சத்தியமூர்த்தி பவனில் பதவியேற்றுக் கொண்ட போது பிரம்மாண்ட விழா ஒன்றையும் நடத்தினார். சத்திய மூர்த்தி பவனுக்கு திறந்தவெளி ஜீப்பில் நின்றவாறு சென்ற செல்வப்பெருந்தகை, காமராஜர் நினைவு இல்லத்தின் மாதிரி மேடை செட்டிங் அமைக்கப்பட்டு அதில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
செல்வப்பெருந்தகையோடு தமிழக காங்கிரஸ் தலைவர் ரேஸில் இருந்த விஜயதரணி, கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர், உள்ளிட்டோரை சத்தியமூர்த்தி பவன் பக்கம் பார்க்க முடியவில்லை.












Click it and Unblock the Notifications