அதிர்ச்சி.. திருவள்ளூரில் 17 வய்து சிறுமியிடம் அத்துமீறிய வடமாநில இளைஞர்! தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அருகே 17 வயது சிறுமியின் வாயை மூடி முள் செடிகளில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வடமாநில இளைஞர் எரோமல் அலி கைது செய்யப்பட்டுள்ளார். வாயை மூடி சிறுமியை வன்கொடுமை செய்ய முயன்ற போது, அந்த சிறுமி கத்தி கூச்சலிட்டுள்ளார். இதன்பின் அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து வடமாநில இளைஞரை பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
2 வாரங்களுக்கு முன்பாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி முடித்து பாட்டி வீட்டிற்கு சென்ற சிறுமியை பின் தொடர்ந்து சென்ற ஒரு இளைஞர், திடீரென சிறுமியை தூக்கிக் கொண்டு செல்லும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியது.

இதன்பின் ரத்தக் காயங்களுடன் சிறுமி அந்த இளைஞரிடம் இருந்து தப்பிச் சென்று பெற்றோரிடம் சென்றது. இதன்பின் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. அதேபோல் போலீசார் தரப்பில் குற்றவாளியை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவி வந்தது. 10 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளியை கைது செய்ய முடியவில்லை.
இதன்பின் ஆந்திரா எல்லையில் இருந்த தாபாவில் பணியாற்றி வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜூ விஸ்வகர்மா என்ற வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டார். அவருக்கு முறையாக மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து போலீசார் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மீண்டும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே 17 வயது சிறுமியிடம் வடமாநில இளைஞர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சென்னை - திருப்பதி இடையிலான 6 வழிச்சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக ஏராளமான வடமாநில இளைஞர்கள் அழைத்து வரப்பட்டு அப்பகுதியில் அமைக்கப்பட்ட குடிசைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கனகம்மாசத்திரம் அருகே பாலப்பணிகள் நடந்து வந்திருக்கிறது. அந்த வழியாக 17 வயது சிறுமி நடந்து சென்றிருக்கிறார். அவரை பின் தொடர்ந்து இளைஞர் நடந்து சென்றுள்ளார். திடீரென சிறுமியின் வாயை மூடி முள்செடிகள் நிறைந்த தனிமையான பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
அந்த நேரத்தில் சிறுமி கத்தி கூச்சலிட, உடனடியாக அக்கம் பக்கத்தினர் வந்திருக்கின்றனர். தொடர்ந்து அந்த இளைஞரை சரமாரியாக அடித்த பொதுமக்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதன்பின் வடமாநில இளைஞரை அழைத்து சென்ற போலீசார், அவரை போக்சோ வழக்கில் கைது செய்திருக்கின்றனர்.
இந்த நிலையில் அவரின் பெயர் எரோமல் அலி என்பது தெரிய வந்துள்ளது. இவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதையும் போலீசார் உறுதி செய்துள்ளனர். அடுத்தடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் வடமாநிலத்தவர்கள் பாலியல் வன்கொடுமை விவகாரங்களில் ஈடுபட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications