"பெரிய சத்தம் கேட்டுச்சி.. எட்டிப் பார்த்தா" ஹெலிகாப்டர் விபத்தை நேரில் பார்த்தவரின் பயங்கர அனுபவம்
சென்னை: குன்னூர் அருகே இன்று முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்ளிட்டோர் பயணம் செய்த விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசி ஒருவர் தனது பயங்கர அனுபவத்தை நிருபர்களிடம் விவரித்துள்ளார்.
Recommended Video
Mi-17V5 என்ற வகையை சேர்ந்த இந்த ஹெலிகாப்டர், சூலூரிலிருந்து வெலிங்டனுக்கு முற்பகல், 11.47 மணிக்கு புறப்பட்டுள்ளது.
இது 12.20 மணிக்கு குன்னூர் அருகேயுள்ள, காட்டேரி என்ற வனப் பகுதியில் திடீரென விழுந்து நொறுங்கியது.
டிச-8 பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்துச்செய்யக்கோரி வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
இதையடுத்து, சுமார் இரண்டு மணி நேரம் அங்கே தீப்பிடித்து எரிந்த நிலையில் அதில் பயணித்தவர்கள் பலரது உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டன.
13 பேர் பலி என தகவல்
சம்பவ இடத்தில் 4 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டது. இதன் பிறகு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மற்றும் சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்தோர் ஆகியோரையும் சேர்த்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 13 என்ற அளவுக்குச் சென்றுள்ளது.
பிபின் ராவத் பயணம்
முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோர் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர் அவர்களைப்பற்றி ராணுவ தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் விபத்து சம்பவத்தை நேரில் பார்த்த நஞ்சாபுரா சர்க்கிள் பகுதியிலுள்ள, கிருஷ்ணசாமி என்பவர் அந்த அனுபவத்தை நிருபர்களிடம் தெரிவித்தார்.
மரத்தில் மோதியது
அவர் கூறுகையில்: ஹெலிகாப்டர் வந்தபோது திடீரென பெரிய சத்தம் கேட்டது. அந்த சத்தம் வந்தபோது நான் எட்டி பார்த்தேன். அது கீழே உள்ள மரத்தில் மோதியது. மோதும்போது அது சுற்றிலும் நெருப்பு காணப்பட்டது. அங்குள்ள ஒரு பெரிய மரத்தில் அந்த ஹெலிகாப்டர் மோதியது. பிறகு அந்த இடத்திலிருந்து பெரும் புகை கிளம்பியது.
பயந்து போன உள்ளூர்வாசி
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நான், பக்கத்து வீட்டுப் பையனை கூப்பிட்டேன். அவர் ஓடி வந்து பார்த்து, போலீசுக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் சொன்னார். நான் பார்க்கும் போது ஹெலிகாப்டரில் இருந்த ஒருவர் எரிந்தபடி அப்படியே சாய்ந்தார். மற்றவர்கள் ஹெலிகாப்டர் கீழே விழும்போது பொத், பொத்தென்று கீழே விழுந்தார்கள். உடலில் தீ பிடித்து எரிந்த நிலையில் அவர்கள் அப்படியே கீழே விழுந்ததை பார்த்தேன். அதற்கு மேலும் அதை என்னால் பார்க்க முடியவில்லை. பயத்தில் ஓடி வந்துவிட்டேன். இவ்வாறு கிருஷ்ணசாமி தெரிவித்தார்.