எனது தந்தையின் பாட்டனார் கட்டிய கோவில் அது! தலைவர் குடும்பம் தான் பராமரிக்கிறது! துரை வைகோ விளக்கம்!
சென்னை: வைகோ குறித்த மதவாத சக்திகளின் அவதூறுகள் ஒருபோதும் எடுபடாது என மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
வைகோவின் பாட்டனார் கட்டிய கோவில் சுந்தர்ராஜ பெருமாள் கோவில் என புது தகவலையும் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான துரை வைகோவின் பதிவு வருமாறு;
இந்தி திணிப்பு - தாழையூர் தங்கவேல் தீக்குளிப்பு மரணமே இறுதியாக இருக்கட்டும்: வைகோ வீரவணக்கம்
மத நம்பிக்கை
தலைவர் வைகோ அவர்கள் ஒரு பகுத்தறிவுவாதி. அவர், யாருடைய மத நம்பிக்கைகளுக்கும் எதிரானவரல்ல. மசூதிகளில் தொழுகைகள் நடக்கட்டும். தேவாலயங்களில் ஜெப கூட்டங்கள் நடக்கட்டும். இந்து கோவில்களில் ஆறுகால பூஜை நடக்கட்டும், ஒருபுறம் பகுத்தறிவு பிரச்சாரமும் நடக்கட்டும் என்று முழங்கியவர் நம் தலைவர் வைகோ அவர்கள். யாருடைய மத நம்பிக்கைகளையும், உணர்வையும் தலைவர் ஒருபோதும் காயப்படுத்தியதில்லை.
சுந்தரராஜப் பெருமாள்
தலைவர் வைகோ அவர்களின் பாட்டனார் கட்டிய சுந்தரராஜப் பெருமாள் கோவிலுக்குப் போனாலும், சங்கரன்கோவில் கோமதியம்மன் கோவிலுக்குப் போனாலும், கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் கோவிலுக்குப் போனாலும், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குப் போனாலும் தலைவர் வைகோ அவர்கள், தன்னுடைய கருப்புத் துண்டை கழற்றி விட்டு தான் உள்ளே நுழைவார். அதற்குப்பெயர் கடவுள் நம்பிக்கை இல்லை. அங்கே வழிபடும் பொதுமக்களின் நம்பிக்கையை மதிக்கும் தலைவரின் உயரிய பண்பு ஆகும்.
அரசியல் பிழைப்புவாதிகள்
சில மதவாத அரசியல் பிழைப்புவாதிகள் தலைவர் வைகோ அவர்கள் சுந்தரராஜப்பெருமாள் கோவிலுக்குச் சென்ற செய்தியை போட்டு அவரை விமர்சிக்கும் வேலையில் ஈடுபட்டு உள்ளார்கள். இதை அறியாமை என்பதா? அல்லது திட்டமிட்டு செய்யும் செயல் என்பதா? தெரியவில்லை. அந்தக் கோவில், தலைவர் வைகோ அவர்களின் பாட்டனார் கட்டியது. நான்கு தலைமுறைகளாக அந்தக் கோவிலை தலைவர் குடும்பம் தான் பராமரித்து வருகின்றது.
பிரசாதம்
தலைவர் வைகோ அவர்கள் அந்தக் கோவிலுக்கு தேவையான வசதிகளை தொடர்ந்து செய்து தருகிறார். பொதுமக்களின் உணர்வுகளை அவர்களின் வழிபாட்டு நம்பிக்கையை மதித்து தான் இந்தப் பணிகளை செய்து வருகின்றார். கோவிலில் பூசை செய்பவர் தரும் திருநீறையோ, பிரசாதத்தையோ அவர்களின் நம்பிக்கைக்காகத் தான் தலைவர் பெற்றுக் கொண்டார்.
பார்வையில் தான் குறைபாடு
இதை விமர்சிப்பவர்களின் பார்வையில் தான் குறைபாடு இருக்கின்றது. திராவிட இயக்கக் கொள்கை யாருடைய நம்பிக்கைகளுக்கும் எதிரானது அல்ல. நாம் பகுத்தறிவு கொள்கைப் பிரச்சாரத்தை முன்னெடுப்பதைப் போல, நம்பிக்கை உடையவர்கள் கோவிலுக்கு செல்லுகிறார்கள். அப்படிப் போகிறவர்களை விமர்சிப்பதும், அவர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதும் நம் மாண்பு அல்ல.
அர்த்தமற்ற அவதூறுகளால்
அப்படித் தான் தலைவர் வைகோ அவர்களின் நடவடிக்கையையும் நாம் பார்க்க வேண்டும். ஐம்பத்தியேழு ஆண்டுகளாக தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக, வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காக, இன மொழி உரிமைகளுக்காக, திராவிட இயக்க இலட்சியங்களுக்காக ஓய்வறியாது உழைத்து வருபவர் நம் தலைவர் வைகோ அவர்கள். ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக ஐந்தரை ஆண்டுகள் சிறையில் வாடியவர்.
தலைவர் வைகோ அவர்களைப் போன்ற திராவிட இயக்கப் பற்றாளரை, இலட்சியவாதியை, கொள்கைவாதியை அர்த்தமற்ற அவதூறுகளால் அழுக்காக்கிவிட முடியாது.