தப்பியது அமைச்சர் பதவி! சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கீதா ஜீவன் உட்பட 5 பேரும் விடுதலை!
சென்னை: வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக அமைச்சர் கீதா ஜீவன், அவரது சகோதரரான தூத்துக்குடி மேயர் ஜெகன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 5 பேரும் விடுதலை செய்யப்பட்டார். இதனால் கீதா ஜீவனின் அமைச்சர் பதவி தப்பி இருக்கிறது.
1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி எம்.எல்.ஏவாக இருந்தவர் தற்போதைய அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை என்.பெரியசாமி. அவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ2.31 கோடி ரூபாய் சொத்து குவித்தார் என்பது வழக்கு. அப்போது பஞ்சாயத்து தலைவராக இருந்த கீதா ஜீவனும் இவ் வழக்கில் சேர்க்கப்பட்டார்.

இந்த வழக்கில் 2003-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் என்.பெரியசாமி மீது முதன்மை குற்றம்சாட்டப்பட்டிருந்தது. 2-வது என்.பெரியசாமி மனைவி எபினேசர், 3-வது மகன் ராஜா, 4-வதாக தற்போதைய தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், 5-வதாக அமைச்சர் கீதா ஜீவனின் கணவர் ஜீவன் ஜேக்கப், 6-வதாக கீதா ஜீவன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை என்.பெரியசாமி கடந்த 2017-ம் ஆண்டு காலமானார். அவரைத் தவிர குடும்பத்தினர் 5 பேர் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. இவ்வழக்கில் இருந்து தம்மை விடுவிக்க கோரி கீதா ஜீவன் தாக்கல் செய்த மனு ஏற்கனவே டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
இதன்பின்னர் இவ்வழக்கு விசாரணைக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் கீதா ஜீவன் ஒரு சீராய்வு மனு தாக்கல் செய்தார். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் நீதிபதி குருமூர்த்தி இவ்வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் அவரது மகனும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் இன்று இணைந்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனால் ஒட்டுமொத்த திமுகவும் உற்சாகத்தில் இருக்கிறது.
இந்த நிலையில்தான் இன்று கீதா ஜீவன் வழக்கில் தீர்ப்பு வர இருப்பது பெரும் எதிர்பார்ப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டால் கீதா ஜீவனின் அமைச்சர் பதவி பறிபோகும் எனவும் கூறப்பட்டது. தற்போது சொத்து குவிப்பு வழக்கில் இருந்து கீதா ஜீவன் உள்ளிட்ட 5 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் கீதா ஜீவன் குடும்பத்தினர் மற்றும் திமுகவினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
முன்னதாக தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் தங்கம் தென்னரசு. விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2012-ம் ஆண்டு தங்கம் தென்னரசு, அவருடைய மனைவி மணிமேகலை ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தம் மீதான குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை; எனவே வழக்கில் இருந்து தம்மை விடுவிக்கக்கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி கிறிஸ்டோபர் தீர்ப்பளிக்கையில், சொத்து குவிப்பு வழக்கில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லாததால் இந்த வழக்கிலிருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை விடுவிக்கப்படதாக தெரிவித்திருந்தார். மேலும் தமிழக அமைச்சர்களான ஐ.பெரியசாமி, செந்தில் பாலாஜி ஆகியோர் மீதான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில் அமைச்சர்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications