தமிழகத்தில் இன்று தொடங்கும் தடுப்பூசி திருவிழா.. யார் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம்? என்ன விதிமுறை?
சென்னை: தமிழகத்தில் இன்று தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி நடைபெறும் நிலையில், தினசரி இரண்டு லட்சம் தடுப்பூசியைச் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது.
புதிய கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருந்தன. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பைக் குறைக்கத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் விரைவாக மேற்கொள்ளப்படுகிறது.
டிக்கா உத்சவ் திருவிழா
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், கொரோனா பரவல் குறித்து அனைத்து மாநில முதல்வர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்த டிக்கா உத்சவ் எனப்படும் தடுப்பூசி திருவிழாவை நடத்த அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா
பிரதமரின் கோரிக்கையை ஏற்றுப் பல மாநிலங்களில் கடந்த 11ஆம் தேதி முதல் டிக்கா உத்சவ் தடுப்பூசி திருவிழா நடைபெற்றது. அதேநேரம் தமிழ்நாட்டில் 14ஆம் தேதி தடுப்பூசி திருவிழா தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் இன்று தொடங்கி, அடுத்த மூன்று நாட்களுக்குத் தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. தமிழகத்தில் தற்போது வரை 39.44 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
யார் எடுத்துக்கொள்ளலாம்
தமிழகத்தில் தற்போது தினசரி 1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்த சுகாதார துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. 45 வயதைக் கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள மருத்துவமனைகள், அரசு மருத்துவமனை கல்லூரிகள், ஆரம்ப சுகதாரா மையங்கள், மினி கிளினிக்குகள், தனியார் மையங்கள் 4328 தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறுகிறது.
சிறப்பு மையங்கள் உள்ளதா?
கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் டிக்கா உத்சவ் தடுப்பூசி திருவிழாவின்போது அதிக அளவிலான மக்களுக்குத் தடுப்பூசிகளைச் செலுத்த ஏதுவாக புதிய கொரோனா தடுப்பூசி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆனால், தமிழகத்தில் தற்போதுள்ள தடுப்பூசி மையங்கள் மூலம் தினசரி 4 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடமுடியும் என்பதால் புதிய தடுப்பூசி மையங்கள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என்று சுகாதார துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் நேற்று நாளில் 6,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 9,47,129 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாக நேற்று மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் கொரோனாவுக்கு 12,945 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 3,289 பேர் குணமடைந்துள்ளனர்.