ஆபாச பேச்சு.. கொலை மிரட்டல்.. வசமாய் சிக்கிய ரவுடி பேபி சூர்யா.. நண்பர் சிக்காவோடு அதிரடி கைது
சென்னை: ஆபாசமாக பேசி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக டிக்டாக்கின் மூலம் பிரபலமான ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கா ஆகியோரை மதுரை சைபர் க்ரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் திருநகரை சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் டிக் டாக்கில் ரவுடி பேபி சூர்யா என்ற பெயரில் கணக்கு தொடங்கி வீடியோக்கள் வெளியிட்டு வந்தார். மேலும் ஆபாசமாகவும் அடிக்கடி பேசி வந்தார்.

குறிப்பாக பெண்கள், ஆண்கள் என்ற பாகுபாடு இன்றி முகம் சுளிக்கும் வகையில் ஒருவரை திட்டுவதும், முகம் சுளிக்கும் வகையில் ஆபாசமான முறையில் வீடியோக்கள் பதிவேற்றியும் வந்தார். இத்தகைய செயல்களால் சர்ச்சைக்குள்ளான அவர் டிக்டாக்கில் பிரபலமும் அடைந்தார்.
மேலும் இவர் பேசும் ஆபாசமான வார்த்தைகள் அடங்கிய ஆடியோக்கள் வெளியாகி இணையதளங்களில் விவாதமானது. அதோடு ரவுடி பேபி சூர்யா மீது பல வழக்குகள் பாய்ந்தன. இருப்பினும் அவர் திருந்தவில்லை. இந்நிலையில் தான் பெண் ஒருவரின் ஆபாசப்படத்தை வெளியிடுவதாக கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அதாவது கோவையை சேர்ந்தவர் சித்ரா. இவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வரும் இவர் மக்கள் பார்வை கல்வி அறக்கட்டளை நடத்தி வருகிறார். அதோடு, ‛மக்கள் பார்வை' என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்நிலையில் தான் சமூக வலைதளங்களில் ரவுடி பேபி சூர்யா ஆபாசமாக பேசுவதாக கூறி கோவையில் அவர் புகாரளித்துள்ளார்.
இதையடுத்து ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கந்தர் எனும் சிக்கா, சூசை மேரி, ஹரிகுமார் ஆகியோர் சித்ராவுக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ரவுடி பேபி சூர்யா, தன் மீதான புகாரை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் கொலை செய்துவிடுவேன் என வலைதளங்கள் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். அதோடு சைலண்ட்டாக வந்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளனர்.
இதனால் பயந்துபோன சித்ரா, கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். இதுபற்றி விசாரணை நடத்திய சைபர் க்ரைம் போலீசார் ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் என்ற சிக்கா உள்பட 4 பேர் மீதும் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தான் சைபர் க்ரைம் போலீசார் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கந்தர் என்ற சிக்கா ஆகியோரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications