இஞ்சி, பூண்டு சாகுபடிக்கு அதிக முக்கியத்துவம்! நிதியை தாராளமாக ஒதுக்கிய தமிழக அரசு! பட்ஜெட் விவரம்!
சென்னை: மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி, பூண்டு உள்ளிட்ட உணவுப்பொருட்கள் சாகுபடிக்கு தமிழக வேளாண் பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
கல்வராயன் மலை, கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் பூண்டு சாகுபடி செய்ய ரூ.1 கோடி நிதியும், இஞ்சி சாகுபடிக்கு ரூ.3 கோடி நிதியும் தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் இது தொடர்பாக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆற்றிய உரையின் விவரம் பின்வருமாறு;

பூண்டு சாகுபடி
மருத்துவ குணம் நிறைந்த பூண்டு சாகுபடி, புதிதாக கல்வராயன் மலை, கொல்லிமலை போன்ற வாய்ப்புள்ள இதர பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். ஆயிரத்து 250 ஏக்கர் பரப்பளவில் ஏக்கருக்கு எட்டு ஆயிரம் ரூபாய் வீதம், ஒரு கோடி ரூபாய் நிதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இஞ்சி சாகுபடி
உள்நாட்டு, அயல்நாட்டு சந்தைகளில் மஞ்சள், இஞ்சி தேவையை பூர்த்தி செய்யும் வகையில், உழவு, நடவுக்குரிய விதைக்கிழங்குகள், இதர இடுபொருட்களுக்கு பின்னேற்பு மானியம் வழங்கப்படும். இத்திட்டம், ஆறு ஆயிரத்து 250 ஏக்கர் பரப்பளவில் மூன்று கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.

தக்காளி சாகுபடி
தமிழ்நாட்டில் தக்காளிப் பயிரானது வீட்டுத் தோட்டம், பாதுகாக்கப்பட்ட சூழல், பரந்த பரப்புகள் ஆகியவற்றில் சுமார் 53,000 எக்டரில் பயிரிடப்பட்டு
16 இலட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. சந்தைப்படுத்துதலில் ஏற்படும் விலை ஏற்ற இறக்கங்கள், தக்காளி விவசாயிகளின் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கின்றன. உற்பத்தி குறைவாக உள்ள மே, ஜுன், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் சாகுபடியினை அதிகரிக்கும் விதமாக, தக்காளி விவசாயிகளுக்கு, ஊக்கத்தொகையாக அல்லது இடுபொருட்களாக, ஏக்கருக்கு எட்டாயிரம் ரூபாய் மானியத்தில், ஐந்து ஆயிரம் ஏக்கரில், இத்திட்டம் நான்கு கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும்.
Recommended Video

மாற்றுப் பயிர்
ஏற்றம் தரும் மாற்றுப் பயிர் திட்டத்தில், குறைந்த வருமானத்தைத் தரக்கூடிய பயிர்களுக்கு மாற்றாக காய்கறிகள், பழங்கள், மலர்கள், சுவைதாளிதப் பயிர்களை சாகுபடி செய்யவும், தானியப்பயிர்களின் அறுவடையைத் தொடர்ந்து குறுகிய கால காய்கறிகள், பழங்கள் பயிரிடவும் ஊக்குவிக்கப்படும். இத்திட்டத்திற்கு, 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 20 ஆயிரம் ஏக்கரில் ஒன்றிய, மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும்.












Click it and Unblock the Notifications